
ரோஹித் காயம்
ரோஹித் சர்மா 2020 ஐபிஎல் தொடரின் இடையே காயமடைந்தார். அவருக்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டு இருந்தது, அவர் விரைவில் மீண்டு விடுவார் என்றே தகவல்கள் கூறி வந்தன. பிசிசிஐ பிசியோதெரபிஸ்ட் மற்றும் மும்பை இந்தியன்ஸ் மருத்துவக் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வந்தது.

அணியில் நீக்கம்
இந்த நிலையில், ஆஸ்திரேலிய ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணிகளில் ஒன்றில் கூட ரோஹித் சர்மா பெயர் இடம் பெறவில்லை. காயத்தை காரணமாக காட்டி, ஜனவரி வரை நடைபெற உள்ள தொடர்களில் அவர் பெயர் நீக்கப்பட்டு இருந்தது.

ஐபிஎல் தொடரில் ஆடினார்
இந்த நிலையில், பிசிசிஐக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அவர் ஐபிஎல் தொடரின் கடைசி லீக் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பெற்று ஆடினார். இது பிசிசிஐ அவரை அணியில் இருந்து நீக்கியதை கேலிக் கூத்தான விஷயமாக மாற்றியது.

ரவி சாஸ்திரி
பிசிசிஐ மீது கடும் விமர்சனம் எழுந்தது. அதே போல, ரோஹித் சர்மா காயம் பற்றி தனக்கு தெரியாது எனக் கூறிய இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி மீதும் சந்தேகத்தை கிளப்பியது. அவர் காயத்தை பற்றி முழுமையாக தெரியவில்லை என கூறி விட்டு, ஆனால் ரோஹித் காயம் குணமாகாமல் விரைவில் அணிக்கு திரும்ப முயற்சி செய்யக் கூடாது எனவும் கூறி இருந்தார்.

சேவாக் கேள்வி
அது குறித்து சேவாக் கேள்வி எழுப்பி உள்ளார். ரோஹித் சர்மா காயம் குறித்து பயிற்சியாளர் ரவி சாஸ்திரிக்கு தெரியாமல் இருக்க வாய்ப்பே இல்லை. அவரிடம் நிச்சயம் இது பற்றி தேர்வுக் குழுவில் பேசி கருத்து கேட்டு இருப்பார்கள் என்றார் சேவாக்.

தேர்வு செய்யாமல்..
மேலும், தற்போது ரோஹித் சர்மா ஐபிஎல் தொடரில் ஆடி விட்டார். அடுத்து பிளே-ஆஃப் சுற்றிலும் ஆடுவார். ஆனால், அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை. இப்போது என்ன செய்யப் போகிறீர்கள்? என பிசிசிஐயை கேள்விகளால் விமர்சித்துள்ளார் சேவாக்.

பிசிசிஐ சொதப்பல்
பிசிசிஐ ரோஹித் சர்மா விஷயத்தில் மோசமாக சொதப்பி உள்ளது என்பதே உண்மை. ஒரு வீரர் ஐபிஎல் தொடரில் ஆடுகிறார் என்றால் அவர் இந்திய அணியில் நிச்சயம் இடம் பெற வேண்டும். ஒருவேளை ரோஹித் சர்மா காயம் குணமாகாமல் ஐபிஎல் போட்டிகளில் ஆடுகிறார் என்றால் அது பற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Click it and Unblock the Notifications