துபாய்: ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2025 சாம்பியன்ஸ் டிராபி போட்டியில் இந்திய அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. கடைசி நேரத்தில் விராட் கோலி ஆட்டமிழந்த போது ஆஸ்திரேலிய அணி வெற்றி பெறலாம் என சிறிது நம்பிக்கை அடைந்தது. ஆனால், நடந்ததோ வேறு.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி டாஸ் வென்று பேட்டிங்கைத் தேர்வு செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் கூப்பர் கானொலி டக் அவுட் ஆனார். அடுத்து அதிரடியாக ஆட்டம் ஆடிய டிராவிஸ் ஹெட் வருண் சக்கரவர்த்தியின் வலையில் விழுந்தார். அவர் 39 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக ஆடி 73 ரன்கள் சேர்த்தார். மார்னஸ் லாபுஷேன் 29 ரன்களும், ஜோஷ் இங்லிஸ் 11 ரன்களும் எடுத்தனர். அலெக்ஸ் கேரி ஆறாம் வரிசையில் இறங்கி அபாரமாக ஆடி 57 பந்துகளில் 61 ரன்கள் சேர்த்தார். அதன் பின் விக்கெட்டுகள் வரிசையாக விழுந்தன. ஆஸ்திரேலிய அணி 49.3 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 264 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணியில் முகமது ஷமி மூன்று விக்கெட்டுகளையும், வருண் சக்கரவர்த்தி மற்றும் ரவீந்திர ஜடேஜா தலா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருந்தனர். ஹர்திக் பாண்டியா மற்றும் அக்சர் பட்டேல் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தியிருந்தனர்.
அடுத்து, துபாயின் மந்தமான ஆடுகளத்தில் 265 ரன்கள் என்ற சவாலான இலக்கை நோக்கி இந்திய அணி பேட்டிங் செய்தது. சுப்மன் கில் 8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் அளித்தார். ரோஹித் சர்மா 28 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதன் பின் மூன்றாவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த விராட் கோலி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயர் 91 ரன்கள் சேர்த்தனர்.
ஸ்ரேயாஸ் ஐயர் 45 ரன்கள் எடுத்து ஆடம் ஜாம்பா பந்துவீச்சில் பவுல்ட் அவுட் ஆனார். அக்சர் பட்டேல் அதிரடியாக ஆட முயன்று 30 பந்துகளில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். விராட் கோலி 98 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். அவரது ஆட்டத்தால் இந்திய அணி 200 ரன்களை எட்டியது.
அப்போது இந்திய அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 36 ரன்கள் தேவை என்ற நிலை இருந்தது. அரைசதம் அடித்த கோலி ஆட்டமிழந்ததால் இந்திய அணி விக்கெட் சரிவை சந்திக்கும் என ஆஸ்திரேலியா எதிர்பார்த்தது. ஆனால், அது நடக்கவில்லை. கே.எல். ராகுல் மற்றும் ஹர்திக் பாண்டியா இணைந்து இந்திய அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
ஹர்திக் பாண்டியா மற்றும் கே.எல். ராகுல் பந்துகளைச் சரியாக கணித்து பவுண்டரிகள் அடித்தனர். அவசரப்படாமல் நிதானமாக விளையாடினர். நாதன் எல்லிஸ் பந்துவீச்சில் மிக கவனமாக ஆடிய அவர்கள் இருவரும், சுழற் பந்துவீச்சாளர்களான ஆடம் ஜாம்பா மற்றும் தன்வீர் சங்கா பந்துவீச்சில் அதிரடியாக சிக்ஸர்களைப் பறக்க விட்டனர்.
ஹர்திக் பாண்டியா அதிரடியாக ஆடி 24 பந்துகளில் 28 ரன்கள் சேர்த்தார். அவர் மூன்று சிக்ஸர்கள் மற்றும் ஒரு பவுண்டரி அடித்தார். கே.எல். ராகுல் கடைசி வரை ஆட்டம் இழக்காமல் 36 ரன்கள் எடுத்தார். அவர் கடைசியாக வெற்றிக்குத் தேவையான நான்கு ரன்களை சிக்ஸ் அடித்து நிறைவு செய்தார். இந்திய அணி நான்கு விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.