நவி மும்பை: 2025 ஐசிசி மகளிர் ஒருநாள் போட்டி உலகக் கோப்பை தொடரின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்திய அணி, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டீல் மைதானத்தில் அக்டோபர் 30 அன்று எதிர்கொள்கிறது. இந்த முக்கியமான நாக்-அவுட் போட்டியின் போது மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே, இந்த போட்டி நடைபெறுமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. ஒருவேளை மழையால் போட்டி பாதிக்கப்பட்டால், எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும் என்ற கேள்வி ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவி மும்பையில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இந்திய அணி விளையாடிய கடைசி இரண்டு லீக் போட்டிகளும் மழையால் பாதிக்கப்பட்டன. தற்போது, போட்டி நாளான வியாழக்கிழமை (அக்டோபர் 30) அன்று பிற்பகலில் மழை பெய்ய 50 சதவீதத்திற்கும் அதிகமான வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால், போட்டி திட்டமிட்டபடி நடைபெறுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

ஐசிசி தொடர்களின் நாக்-அவுட் போட்டிகளுக்கு 'ரிசர்வ் டே' எனப்படும் மாற்று நாள் ஒதுக்கப்படுவது வழக்கம். அதன்படி, இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதிப் போட்டி மழையால் வியாழக்கிழமை நடைபெற முடியாமல் போனால், வெள்ளிக்கிழமை (அக்டோபர் 31) அன்று போட்டி பாதியில் நிறுத்தப்பட்ட இடத்தில் இருந்து தொடர்ந்து நடத்தப்படும்.
ஐசிசி-யின் விதிமுறை 13.6-ன் படி, "அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளுக்கு ஒரு ரிசர்வ் நாள் ஒதுக்கப்படும். திட்டமிடப்பட்ட நாளில் முடிக்கப்படாத போட்டி, ரிசர்வ் நாளில் தொடரப்படும்" என்று கூறப்பட்டுள்ளது.
முதலில், திட்டமிடப்பட்ட நாளிலேயே ஓவர்களைக் குறைத்து போட்டியின் முடிவைப் பெற அனைத்து முயற்சிகளும் மேற்கொள்ளப்படும். ஒரு போட்டிக்கான முடிவைப் பெறத் தேவையான குறைந்தபட்ச ஓவர்கள் (ஒரு அணிக்கு 20 ஓவர்கள்) வீச முடியாத பட்சத்தில் மட்டுமே, போட்டி ரிசர்வ் நாளுக்குக் கொண்டு செல்லப்படும்.
ஒருவேளை, போட்டியின் ரிசர்வ் நாளான வெள்ளிக்கிழமையும் மழை குறுக்கிட்டு, ஆட்டம் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டால் என்ன செய்வது? எந்த அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறும்? இந்தச் சூழ்நிலையில், இந்திய அணிக்கு பெரும் ஏமாற்றமே மிஞ்சும். ஆஸ்திரேலிய அணி நேரடியாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றுவிடும்.
ஐசிசி விதிகளின்படி, நாக்-அவுட் போட்டி மழையால் முழுவதுமாகக் ரத்து செய்யப்பட்டால், லீக் சுற்றில் புள்ளிகள் பட்டியலில் அதிக இடத்தில் இருந்த அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, அடுத்த சுற்றுக்கு முன்னேறும். அந்த வகையில், இந்தத் தொடரின் லீக் சுற்றில் ஆஸ்திரேலிய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, புள்ளிப் பட்டியலில் இந்தியாவை விட உயர்ந்த இடத்தைப் பிடித்தது. ஆஸ்திரேலியா விளையாடிய 7 லீக் போட்டிகளில் 6-ல் வெற்றி பெற்று முதலிடத்தில் இருந்தது.
அதே சமயம், இந்திய அணி 3 வெற்றி, 3 தோல்வி மற்றும் ஒரு முடிவில்லாத போட்டியுடன் புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்தையே பிடித்தது. லீக் சுற்றில் இரு அணிகளும் மோதிய போட்டியிலும் ஆஸ்திரேலியா 3 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியாவை வீழ்த்தியிருந்தது குறிப்பிடத்தக்கது. எனவே, போட்டி ரத்தாகும் பட்சத்தில், லீக் சுற்றின் புள்ளிகள் அடிப்படையில் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இந்த முக்கியமான போட்டிக்கு முன்னதாக, இந்திய அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அணியின் நட்சத்திரத் தொடக்க வீராங்கனை பிரதிகா ராவல், கணுக்கால் காயம் காரணமாகத் தொடரிலிருந்து விலகியுள்ளார். இது இந்திய அணியின் பேட்டிங் வரிசையைப் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்குப் பதிலாக அதிரடி வீராங்கனை ஷஃபாலி வர்மா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.