இந்தியா தோல்வி அடைந்தது
இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் எளிதாக அனைத்து போட்டிகளையும் வெல்லும் என கணிக்கப்பட்டது. ஆஸ்திரேலிய அணியில் அனுபவ வீரர்கள் குறைவாக இருந்ததே காரணம். ஆனால், முதல் போட்டியில் வென்ற இந்தியா, இரண்டாவது டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்தது.
துவக்க வீரர்கள் குழப்பம்
துவக்க வீரர்கள் முரளி விஜய் - ராகுல் இருவருமே சரியாக ரன் குவிப்பதில்லை. ப்ரித்வி ஷா காயத்தால் தொடரில் இருந்து விலகி உள்ளார். இந்த நிலையில் மாயங்க் அகர்வால் டெஸ்ட் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் துவக்க வீரராக களம் இறங்குவார் என கூறப்பட்டது. ஆனால், எதுவுமே உறுதியான தகவலாக இல்லை.
வதந்தி என்ன?
இந்த நிலையில், இந்திய வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலில் தன் கிரிக்கெட் உபகரணங்களோடு தவான் காணப்பட்டதாக மும்பை மிரர் என்ற பத்திரிக்கையில் செய்தி வெளியாகி உள்ளது. இந்த செய்தியால் இந்திய அணியில் துவக்க வீரர்கள் யாரும் சரியாக இல்லாததால் அனுபவ வீரர் தவானை இந்தியா மீண்டும் பயன்படுத்த முடிவு செய்து விட்டதாக வதந்திகள் கிளம்ப ஆரம்பித்துள்ளன.
தவான் ஏன் அங்கே சென்றார்?
அதே சமயம், தவானின் வீடு மெல்போர்ன் நகரில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தவானின் மனைவி மற்றும் குழந்தைகள் ஆஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தான் வசிக்கிறார்கள். தவான் கிரிக்கெட் போட்டிகள் இல்லாத நாட்களில் அங்கே தான் தங்கி இருப்பார். எனவே, தவான் தன் வீட்டில் இருந்து சக வீரர்களை சாதாரணமாக காண சென்று இருக்கலாம்.
அணியில் அழுத்தம்
என்ன உண்மை என்பது உத்தேச அணி அறிவிக்கப்படும் போது தெரிந்து விடும். தற்போது துவக்க வீரர்களாக யாரை களம் இறக்கலாம் என்பதில் இந்திய அணி நிர்வாகம் பெரும் குழப்பத்தில் இருப்பது தெரிகிறது. அடுத்த இரு போட்டிகளிலும் இந்தியா தோல்வி அடைந்தால் தொடரை இழக்க நேரிடும் என்பதால் இந்திய அணி அழுத்தத்தில் உள்ளது.