பேட்டிங் அபாரம்
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி அபாரமாக ரன் குவித்து 20 ஓவர்களில் 190 ரன்கள் எடுத்தது. ராகுல் 47, கோலி 72*, தோனி 40 ரன்கள் எடுத்து இருந்தனர். இதனால், இந்தியா வெற்றி பெற்று விடும் என்ற எண்ணமே முதலில் இருந்தது.
வெற்றி பறிபோனது
முதல் போட்டியில் பேட்டிங் சொதப்பியதால் இந்தியா தோல்வி அடைந்தது. ஆனால், இரண்டாவது போட்டியில் அதிக ரன் குவித்ததால், எப்படியும் இந்தியா வென்று விடும் என்ற எண்ணத்தை தவிடு பொடியாக்கியது இந்திய பந்துவீச்சு.
5 பந்துவீச்சாளர்கள்
கேப்டன் கோலி வழக்கம் போல இந்த போட்டியிலும் சரியாக ஐந்து பந்துவீச்சாளர்களை மட்டுமே களமிறக்கினார். அதில் விஜய் ஷங்கர், க்ருனால் பண்டியா இருவரும் ஆல்-ரவுண்டர்கள். மற்ற மூவர் பும்ரா, சாஹல் மற்றும் சித்தார்த் கௌல்.
வாரி இறைத்தனர்
இவர்களில் சாஹல் மற்றும் சித்தார்த் கௌல் ஓவருக்கு 11.75 மற்றும் 12.27 ரன்கள் கொடுத்து வாரி இறைத்தனர். இவர்கள் இருவரது பந்துவீச்சிலும் தலா 3 சிக்ஸர்கள் அடித்தார் ஆஸ்திரேலிய வீரர் மாக்ஸ்வெல்.
கடைசி ஓவர் சொதப்பல்
இவர்களில் கடைசி ஓவரை வீசினார் சித்தார்த். கடைசி ஓவரில் 9 ரன்கள் எடுத்தால் ஆஸ்திரேலியா வெற்றி பெறும் என்ற நிலையில் ஒரு சிக்ஸ், ஒரு ஃபோர் கொடுத்தார் சித்தார்த் கௌல். இப்படி சித்தார்த் கௌல் மற்றும் சாஹல் ரன்களை வாரிக் கொடுத்து ஆஸ்திரேலிய அணியின் வெற்றிக்கு காரணமாக அமைந்தனர்.
மற்ற பந்துவீச்சாளர்கள்
சித்தார்த் கௌல், சாஹல் - இருவர் தவிர மற்ற வீரர்கள் ஓரளவு பந்து வீசினர். விஜய் ஷங்கர் 4 ஓவர்களில் 38 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்கள் எடுத்தார். பும்ரா, க்ருனால் விக்கெட் எடுக்காவிட்டாலும், 4 ஓவர்களில் 30 மற்றும் 33 ரன்கள் கொடுத்தனர்.
தீர்வு என்ன?
இந்தியா எப்போதும் கூடுதல் பந்துவீச்சாளர் கொண்டு களமிறங்குவதும், பரிசோதனை முயற்சிகளை நிறுத்துவதும் தான் இது போன்ற தோல்விகளுக்கு தீர்வாகும்.