பிரிஸ்பேன்: சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் கடந்த 25 இன்னிங்ஸ்களில் முதல் சதத்தை விளாசி சாதனை படைத்துள்ளார். கடைசியாக ஆஷஸ் தொடரில் சதம் விளாசிய அவர், ஓராண்டுக்கும் மேலாக சதமடிக்க முடியாமல் தடுமாறி வந்தார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியின் 2வது நாள் ஆட்டத்தின் முதல் செஷனில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியது. இதன்பின் ஸ்டீவ் ஸ்மித் - ட்ராவிஸ் ஹெட் கூட்டணி இணைந்து ரன்களை சேர்க்க தொடங்கியது. முதல் சில நிமிடங்கள் அமைதி காத்த ட்ராவிஸ் ஹெட், பின்னர் அதிரடியில் பொளந்து கட்டினார்.

இதனால் இந்திய பவுலர்களின் கவனம் ட்ராவிஸ் ஹெட் பக்கம் இருந்தது. இதனை பயன்படுத்தி ஸ்டீவ் ஸ்மித் நிதானமாக தனது அரைசதத்தை கடந்தார். பார்டர் கவாஸ்கர் டிராபி தொடக்கத்தில் இருந்தே ஸ்டீவ் ஸ்மித்தின் ஃபார்ம் குறித்து பல்வேறு கேள்விகள் எழுந்தன. ஸ்டீவ் ஸ்மித் ஃபார்மின்றி தவித்து வருவதால், அவருக்கு சில காலம் ஓய்வு அளிக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன.
அதேபோல் அவரின் ஃபூட் வொர்க்கை இந்திய பவுலர்கள் சரியாக கண்டறிந்து திட்டங்களை வகுத்து சிக்கல் அளித்தனர். ஆனால் இன்றைய ஆட்டத்தில் ஸ்டீவ் ஸ்மித்திற்கு கொஞ்சம் அதிர்ஷ்டம் கைகொடுக்க, அடுத்தடுத்து ரன்களை விரைவாக சேர்க்க தொடங்கினார். அதிலும் ஜடேஜாவின் பவுலிங்கில் டவுன் தி ட்ராக் இறங்கி வந்து பவுண்டரிகளை விளாசினார்.
சிறப்பாக ஆடிய அவர், 185 பந்துகளில் சதத்தை விளாசி அசத்தினார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் ஸ்டீவ் ஸ்மித்தின் 33வது சதமாக அமைந்துள்ளது. அதேபோல் இந்திய அணிக்கு எதிராக ஸ்டீவ் ஸ்மித் அடிக்கும் 10வது சதம் இதுவாகும். அதுமட்டுமல்லாமல் கடைசியாக ஸ்டீவ் ஸ்மித் விளையாடிய 25 இன்னிங்ஸ்களில் இதுதான் முதல் சதமாகும்.
2023ஆம் ஆண்டு நடந்த ஆஷஸ் தொடரில் தான் ஸ்டீவ் ஸ்மித் கடைசியாக சதம் அடித்திருந்தார். ஓராண்டாக சதம் அடிக்க முடியாமல் திணறி வந்த அவர், இந்திய அணிக்கு எதிரான இந்த ஆட்டத்தில் ஃபார்முக்கு திரும்பியுள்ளார். ஏற்கனவே ட்ராவிஸ் ஹெட்டை கட்டுப்படுத்த முடியாமல் இந்திய பவுலர்கள் திண்டாடி வரும் சூழலில், ஸ்டீவ் ஸ்மித் ஃபார்முக்கு திரும்பி இருப்பது ரசிகர்களிடையே கூடுதல் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
சிறப்பாக ஆடிய அவர் 190 பந்துகளில் 101 ரன்கள் எடுத்து பும்ராவின் பவுலிங்கில் ஆட்டமிழந்தார். ஸ்டீவ் ஸ்மித்தின் இந்த ஆட்டம் ஆஸ்திரேலியா அணிக்கும், ரசிகர்களுக்கும் கூடுதல் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 10 ஆண்டுகளுக்கு பின் நிச்சயம் பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல வாய்ப்பு இருப்பதாக ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.