மெல்போர்ன்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் ஆடி வரும் நான்காவது டெஸ்ட் போட்டியில் ஸ்டீவ் ஸ்மித் அபாரமாக விளையாடி தனது 34 ஆவது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். அதே சமயம், மிகவும் துரதிஷ்டவசமான முறையில் அவர் ஆட்டம் இழந்தார். அதனால், பெரும் ஏமாற்ற, அடைந்தார்.
தான் ஆட்டம் இழந்த விதத்தை நம்ப முடியாமல் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். மெல்போர்னில் நடைபெற்ற இந்த டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் அபாரமாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் அரை சதம் அடித்த நிலையில் ஆட்டம் இழக்காமல் இருந்தார்.

இரண்டாவது நாள் அன்று ஆட்டம் துவங்கியவுடன் கேப்டன் பாட் கம்மின்ஸ் உடன் இணைந்து விரைவாக ரன் சேர்த்தார். ஒரு ஓவருக்கு ஐந்து ரன்கள் என்று விகிதத்தில் அவர்கள் இருவரும் ரன் சேர்த்தனர். அப்போது ஸ்டீவ் ஸ்மித் 34 வது டெஸ்ட் போட்டி சதத்தை நிறைவு செய்தார். மேலும், இந்திய அணிக்கு எதிராக மட்டுமே 11 டெஸ்ட் சதங்களை அடித்து சாதனை படைத்தார்.
அதன் பின், பாட் கம்மின்ஸ் 49 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அடுத்து பின்வரிசை வீரர்களோடு இணைந்து ஆடிய ஸ்டீவ் ஸ்மித் விரைவாக ரன் சேர்க்க முடிவு செய்தார். ஒரு கட்டத்தில் ஆகாஷ் தீப் வீசிய 115 வது ஓவரின் முதல் பந்தில் கிரீஸை விட்டு சில அடி தூரம் வெளியே வந்து பந்தை அடிக்க முயன்றார் ஸ்மித்.
ஆனால், பந்து இன்சைடு எட்ஜ் ஆனது. பந்து ஸ்மித் உடைய ஷூ-வின் பின்பகுதியில் பட்டு நேராக உருண்டு சென்று ஸ்டம்ப்பில் பட்டது. அப்போது ஒரு பெயில்ஸ் மட்டும் கீழே விழுந்தது. இதை அடுத்து அவர் அவுட் ஆகி வெளியேறினார். தான் ஆட்டம் இழந்த விதத்தை நம்ப முடியாமல் நீண்ட நேரம் திகைத்து நின்றார் ஸ்மித்.
பொதுவாக இன்சைடு எட்ஜ் ஆன பின்னர் பந்து ஸ்டம்ப்பில் பெயில்ஸ் தகர்ந்தால் அது அவுட் தான். அதே சமயம், பந்து ஸ்டம்ப்பில் படுவதற்குள் அதை தடுத்து நிறுத்த பேட்ஸ்மேனுக்கு அனுமதி உண்டு. இங்கே ஸ்மித்தின் ஷூவில் வந்து பட்டு நேராக சென்று ஸ்டம்பில் பட்டது. ஸ்மித் கிரீஸை விட்டு நீண்ட தூரம் முன்னே இருந்ததால் அவரால் பந்தை நிறுத்த முடியவில்லை. இதை அடுத்து 140 ரன்கள் எடுத்த நிலையில் ஸ்டீவ் ஸ்மித் வெளியேறினார். அதன் பின் ஆஸ்திரேலிய அணி 474 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.