மும்பை : ஐசிசி உலகக் கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி ஆஸ்திரேலிய விடம் தோல்வி அடைந்ததற்கு ரெய்னா விளக்கம் ஒன்றை அளித்துள்ளார். 2023 ஆம் ஆண்டு உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி தொடர்ந்து பத்து போட்டிகளில் வெற்றி பெற்று கடைசியாக நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் தோல்வியை தழுவியது.
இந்த நிலையில் இந்த தோல்வி குறித்து கருத்து தெரிவித்த சுரேஷ் ரெய்னா இந்திய அணி இனி அனைத்து தொடரிலும் சிறப்பாக செயல்படுவதை நாம் பார்க்க போகிறோம் என்று கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர் இந்திய அணி இறுதிப் போட்டிக்கு செல்வது எப்படி என்பது குறித்து தற்போது நன்றாக அறிந்து கொண்டிருக்கிறார்கள் என்று குறிப்பிட்டுள்ளார். இனி இது போன்ற நெருக்கடியான சூழ்நிலையில் எப்படி விளையாட போகிறோம் என்பதை இந்தியா இனி விரைவில் கற்றுக் கொள்ளும் என்றும் கூறியுள்ளார்.
குறிப்பாக இந்திய அணி தங்களது சொந்த மண்ணில் விளையாடும்போது நன்கு விளையாடுவார்கள் என்றும் ரெய்னா கூறியுள்ளார். சில சமயம் நமக்கு அதிக நெருக்கடி ஏற்படும் போது நமது கவனம் சிதற வாய்ப்பு இருப்பதாக சுட்டி காட்டியுள்ள ரெய்னா, இந்தப் பாடத்தை இந்திய அணி இதன் மூலம் கற்றுக் கொண்டிருப்பார்கள் என்று தான் நம்புவதாகவும் கூறியுள்ளார்.

இந்திய அணி ஆஸ்திரேலியா விடம் இறுதிப் போட்டியில் தோல்வியை தழுவியதற்கு பாட் கம்மின்ஸ், அபாரமான கேப்டன்ஷியே காரணம் என்று சுட்டிக்காட்டி உள்ள ரெய்னா மேக்ஸ்வெலை ஆட்டத்தின் ஏழாவது ஓவரிலேயே பயன்படுத்தி ரோகித் சர்மா விக்கெட்டை அவர் வீழ்த்திய விதம் பிரமிக்கத்தக்கது என்றும் குறிப்பிட்டுள்ளார். அதற்கு ஏற்றார் போல் டிராவிஸ் ஹெட் சிறப்பான கேட்சை ஒன்று பிடித்திருப்பதாகவும் அவர் கூறினார்.
ஆடம் சாம்பா நன்றாக பந்து வீசியதாகவும் குறிப்பாக கம்மின்ஸ் விராட் கோலி விக்கெட்டை வீழ்த்தி இருப்பதாகவும் இந்தியாவை ஒவ்வொரு துறையிலுமே ஆஸ்திரேலிய அணி சிறப்பான திட்டமிட்டதன் மூலம் தோற்கடித்திருப்பதாக ரெய்னா சுட்டிக் காட்டியுள்ளார்.