சிட்னி: ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரின் கடைசி போட்டியில் இருந்து கேப்டன் ரோஹித் சர்மா விலகிய நிலையில் கேப்டன் பதவியை பெற விராட் கோலி விரும்பியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. எனினும், பும்ராவின் தலைமையில் இந்திய அணி ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் களமிறங்கி இருந்தது.
ஆனால், இந்த போட்டியில் இரண்டாவது நாள் ஆட்டத்தில் விராட் கோலியின் கேப்டன்சி ஆசை நிறைவேறி இருக்கிறது. ஆனால், அதற்கான விலை மிகவும் அதிகம். சிட்னியில் நடைபெற்று வரும் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா தலைமையில் இந்திய அணி ஆடியது. முதல் நாள் ஆட்டத்தில் இந்திய அணி பேட்டிங் செய்து 185 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது.

அடுத்து இரண்டாவது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தது. பும்ரா சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். அவர் 10 ஓவர்கள் மட்டுமே வீசிய நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார். அவருக்கு காலில் வலி இருந்ததால் ஆடுகளத்தை விட்டு வெளியேறி மருத்துவமனைக்கு ஸ்கேன் எடுக்க சென்றார்.
அப்போது இந்திய அணியின் கேப்டனாக விராட் கோலி செயல்பட்டார். இதன் மூலமாக அவரது ஆசை நிறைவேறி இருப்பதாக ரசிகர்கள் கூறி வருகின்றனர். பும்ராவின் காயம் பெரிதாக இருந்தால் அவரால் இந்தப் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் பந்து வீச முடியாமல் போகலாம். எனவே, இந்த மோசமான நிலையில் தான் விராட் கோலி தற்காலிக கேப்டனாக செயல்பட்டு இருக்கிறார்.
பும்ரா வெளியேறிய போது ஆஸ்திரேலிய அணி 5 விக்கெட்களை இழந்து இருந்தது. அதன் பின் விராட் கோலியின் தலைமையில் ஆஸ்திரேலிய அணியின் கடைசி 5 விக்கெட்களை இந்திய அணி விரைவாக வீழ்த்தியது. ஆஸ்திரேலிய அணி 181 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. முதல் இன்னிங்ஸ் முடிவில் இந்திய அணி 4 ரன்கள் முன்னிலை பெற்றது.
இந்த தொடரின் முதல் போட்டியில் ரோஹித் சர்மா விடுப்பில் இருந்தார். அப்போது பும்ரா தான் கேப்டனாக செயல்பட்டு இருந்தார். அந்தப் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. எனவே, அவரே கடைசி போட்டியில் கேப்டனாக இருப்பது சரியாக இருக்கும் என இந்திய அணி நிர்வாகம் முடிவு செய்தது. அப்படி இருந்தும் விராட் கோலி கேப்டன் பதவியை கேட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.