மும்பை : ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 தொடரில் பங்கேற்க உள்ள இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. மூத்த வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ரா, ரவீந்திர ஜடேஜா ஆகியோருக்கு அணியில் இடம் அளிக்கப்படவில்லை. சூர்யகுமார் யாதவ் அதிரடியாக கேப்டனாக அறிவிக்கப்பட்டு இருக்கிறார். ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்பார் எனவும், அவர் அந்த போட்டிகளுக்கு துணை கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டு இருக்கிறார்.
உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற அணியில் உள்ள வீரர்களில் சூர்யகுமார் யாதவ், பிரசித் கிருஷ்ணா. இஷான் கிஷன் தவிர மற்ற வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அதனால், அவர்கள் பெயர் டி20 அணியில் அறிவிக்கப்படவில்லை. ஸ்ரேயாஸ் ஐயருக்கு முதல் மூன்று போட்டிகளுக்கு மட்டும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஹர்திக் பாண்டியாவும் காயத்தில் இருப்பதால், இந்திய டி20 அணிக்கு கேப்டனாக சூர்யகுமார் யாதவ் அறிவிக்கப்பட்டுள்ளார். முதல் மூன்று போட்டிக்களுக்கான துணை கேப்டனாக ஆசிய விளையாட்டுப் போட்டியில் தங்கம் வென்ற இந்திய அணியின் கேப்டன் ருதுராஜ் கெயிக்வாட் அறிவிக்கப்பட்டார். தமிழக வீரர் வாஷிங்க்டன் சுந்தருக்கு இந்திய டி20 அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஹர்திக் பாண்டியா காயத்தில் இருந்து இன்னும் மீளாத நிலையில், அவருக்கும் ஓய்வு அளிகப்பட்டுள்ளது. ஒருவேளை பாண்டியா இந்த தொடருக்கு தயார் ஆகி இருந்தால் அவரே கேப்டன் ஆகி இருப்பார். ஆனால், அவர் இல்லாத நிலையில் அடுத்து டி20 அணியில் இருக்கும் அனுபவ வீரரும், தற்போதைய நம்பர் 1 டி20 பேட்ஸ்மேனுமான சூர்யகுமார் யாதவ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இது தற்காலிக பதவியே.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் மோத உள்ளன. முதல் போட்டி வரும் நவம்பர் 23 அன்று விசாகபட்டினத்தில் துவங்க உள்ளது.
அடுத்த நான்கு போட்டிகள் நவம்பர் 26, 28, டிசம்பர் 1, 3 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. ரோஹித் சர்மா, விராட் கோலி. பும்ரா, சிராஜ், பாண்டியா, ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்கள் டி20 அணியில் இடம்பெற இது சரியான வாய்ப்பாகும். இந்த தொடரில் சிறப்பாக ஆடினால் டி20 அணியில் தொடர்ந்து இடம் பெற முடியும்.
இந்த டி20 அணியில் துவக்க வீரர்களாக ருதுராஜ் கெயிக்வாட், யஷஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன் உள்ளனர். அடுத்த மிடில் ஆர்டரில் திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா உள்ளனர். ஆல் - ரவுண்டர் ஸ்பின்னர்களாக அக்சர் பட்டேல், வாஷிங்க்டன் சுந்தர் இடம் பெற்றுள்ளனர். வேகப் பந்துவீச்சு ஆல் - ரவுண்டராக சிவம் துபே இடம் பெற்றுள்ளார்.
முழு நேர ஸ்பின்னராக ரவி பிஸ்னோய் இடம் பெற்றுள்ளார். வேகப் பந்துவீச்சாளர்களாக அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார் இடம் பெற்றுள்ளனர். இந்த இளம் டி20 அணிக்கு விவிஎஸ் லக்ஷ்மன் பயிற்சியாளராக இருப்பார் என கூறப்படுகிறது. ஆசிய விளையாட்டுப் போட்டியில் பங்கேற்று தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பெற்ற பெரும்பாலான வீரர்கள் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான டி20 அணியில் இடம் பெற்று இருக்கின்றனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக களமிறங்க உள்ள இந்திய டி20 அணி : சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ருதுராஜ் கெயிக்வாட் (துணை கேப்டன்), இஷான் கிஷன், யாஷஸ்வி ஜெய்ஸ்வால், திலக் வர்மா, ரிங்கு சிங், ஜிதேஷ் சர்மா ( விக்கெட் கீப்பர்), வாஷிங்க்டன் சுந்தர், அக்சர் பட்டேல், சிவம் துபே, ரவி பிஸ்னோய், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, ஆவேஷ் கான், முகேஷ் குமார். (ஸ்ரேயாஸ் ஐயர் கடைசி இரண்டு போட்டிகளில் மட்டும் பங்கேற்பார்)