விசாகப்பட்டினம் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் இடையே ஆன முதல் டி20 போட்டியில் இந்திய அணிக்கு எதிராக கடைசி ஓவரில் பெரிய ஸ்கோரை அடிக்க திட்டம் போட்டார் ஆஸ்திரேலிய வீரர் டிம் டேவிட்.
ஆனால், கடைசி ஓவரை வீசிய இந்திய அணியின் முகேஷ் குமார் டிம் டேவிட்டின் திட்டத்தை உடைத்தார். முகேஷ் குமார் வீசிய ஒரு பந்தை கூட டிம் டேவிட்டால் சரியாக அடிக்க முடியவில்லை.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. துவக்க வீரர் மேத்யூ ஷார்ட் 13 ரன்களில் ஆட்டமிழந்தார். சர்வதேச கிரிக்கெட்டில் முதல்முறையாக துவக்க வீரராக களமிறங்கிய ஸ்டீவ் ஸ்மித் 41 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். மூன்றாவது வரிசையில் இறங்கிய ஜோஷ் இங்லிஸ் அதிரடி ஆட்டம் ஆடி 50 பந்துகளில் 110 ரன்கள் சேர்த்தார்.

அடுத்து ஸ்டோனிஸ் உடன் ஜோடி சேர்ந்த டிம் டேவிட் 19வது ஓவரின் முடிவில் 8 பந்துகளில் 17 ரன்கள் சேர்த்து இருந்தார். ஸ்டோனிஸ் 4 பந்துகளில் 5 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணி 203 ரன்கள் எடுத்து இருந்தது. கடைசி ஓவரில் டிம் டேவிட் முதல் பந்தை சந்திக்க இருந்தார். அவர் அதற்கு முன்னரே மூன்று பவுண்டரி அடித்து விட்டதால் ஸ்டோனிஸ், ஒதுங்கிக் கொள்ள, டிம் டேவிட் கடைசி ஓவரில் 20 ரன்களாவது அடித்து அணியின் ஸ்கோரை 220க்கும் மேல் கொண்டு செல்லலாம் என திட்டமிட்டார்.
ஆனால், கடைசி ஓவரை வீசிய இந்திய அணியின் முகேஷ் குமார் யார்க்கர் பந்துகளாக வீசி அவரது திட்டத்தை முறியடித்தார். கடைசி ஓவரில் டிம் டேவிட், ஸ்டோனிஸ் நான்கு சிங்கிள் ரன்களை மட்டுமே எடுத்தனர். முகேஷ் குமார் ஒரு நோ பால் வீசியதால் கூடுதலாக ஒரு ரன் கிடைத்தது. அந்த நோ பாலுக்கு பின் வீசப்பட்ட ஃப்ரீ ஹிட்டில் கூட ஆஸ்திரேலிய அணி ஒரு ரன் மட்டுமே எடுத்தது குறிப்பிடத்தக்கது.
கடைசி ஓவரில் 5 ரன்கள் மட்டுமே ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்தது. அதனால், 20 ஓவர்களில் 208 ரன்கள் மட்டுமே எடுத்தது. அடுத்து சேஸிங் செய்த இந்திய அணி கடைசி பந்தில் தான் வெற்றி பெற்றது. முகேஷ் குமார் கடைசி ஓவரில் கூடுதலாக 5 ரன்கள் கொடுத்து இருந்தால் கூட இந்திய அணிக்கு சேஸிங்கில் அது சிக்கலை கொடுத்து இருக்கக் கூடும். ஆனால், முகேஷ் குமார் சிறப்பாக வீசி இந்திய அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக விளங்கினார்.