ஐசிசி உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவிய நிலையில் அடுத்ததாக அதே ஆஸ்திரேலியாவுடன் ஐந்து டி 20 போட்டிகள் கொண்ட தொடர் நடைபெற உள்ளது.
அடுத்ததாக டி20 உலக கோப்பை நடைபெற உள்ளதால் அதற்கு தயாராகும் வகையில் தற்போது இருந்தே அணியை கட்டமைக்கும் வேலையில் தேர்வு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

ஐசிசி உலகக் கோப்பை ஒரு நாள் அணியில் நடு வரிசையில் போதிய இடது கை பேட்ஸ்மேன் இல்லை என்ற குறை இந்தியாவை பெரும் வகையில் பாதித்தது. இறுதிப் போட்டியில் கூட சூரியகுமார் யாதவ் தடுமாறினார். இதனால் டி20 பேட்ஸ்மேனான சூரிய குமாரை ஒரு நாள் போட்டியில் சேர்த்ததை தவறு என்று குற்றச்சாட்டு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் டி20 உலக கோப்பைக்கு திறமை வாய்ந்த இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
இந்த நிலையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி20 போட்டிகளில் பங்கேற்கும் இந்திய அணியை தேர்வு குழு இன்று அறிவித்து இருக்கிறது.அதில் சூரியகுமார் யாதவ், ருதுராஜ், இசான் கிஷன், ஜெய்ஸ்வால்,திலக் வர்மா, ரிங்கு சிங்,ஜித்தேஸ் சர்மா ஆகியோருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் 22 வயதான தமிழக வீரர் சாய் சுதர்சனுக்கு இந்த அணியில் வாய்ப்பு வழங்கப்படவில்லை. சாய் சுதர்சன் ஐபிஎல் தொடரில் ஏற்கனவே தன்னுடைய திறமையை நிரூபித்து விட்டார்.
இறுதிப்போட்டியில் சாய் சுதர்சன் 47 பந்துகளில் 96 ரன்கள் விளாசினார். இதனால் இந்தியாவின் அடுத்த நட்சத்திரமாக இவர் அறியப்பட்டார். இதைப்போன்று இந்திய ஏ அணியிலும் சாய் சுதர்சனுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டு அதிலும் அவர் அரைசதம் அடித்து கலக்கினார். இதனால் சீனியர் அணியில் சாய் சுதர்சனுக்கு விரைவில் இடம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் ஆஸ்திரேலிய தொடரில் சாய் சுதர்சன் பெயரை தேர்வு குழுவினர் அறிவிக்கவில்லை. இது மிகப் பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. பயம் அறியாத திறமையான இளம் வீரர்களுக்கு போதிய வாய்ப்பு வழங்காமல் தான் இந்திய அணி இவ்வாறு முக்கிய போட்டிகளில் தடுமாறுவதாகவும், சாய் சுதர்சன் தன்னுடைய திறமையை ஐபிஎல் தொடரிலே நிரூபித்த நிலையில், அவருக்கு ஏன் வாய்ப்பு வழங்காமல் தேர்வு குழு தாமதம் செய்கிறது என்றும் ரசிகர்கள் கடுமையாக சாடி வருகிறார்கள்.