மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கான இந்திய அணியில் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் முடிவடைந்துள்ள நிலையில், பிசிசிஐ அடுத்த தொடர்களில் கவனத்தை திருப்பியுள்ளது. இந்திய அணி அடுத்ததாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் பங்கேற்கவுள்ளது. நவ.23ஆம் தேதி தொடங்கும் டி20 தொடர் டிச.3ஆம் தேதி வரை நடக்கவுள்ளது. இந்த நிலையில் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இந்திய அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். அதேபோல் துணை கேப்டனாக ருதுராஜ் கெய்க்வாட் நியமனம் செய்யப்பட்டுள்ளார். கடைசி 2 போட்டிகளுக்கு நட்சத்திர வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய அணியுடன் இணைந்து கொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அப்போது அவர் துணை கேப்டனாக செயல்படுவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அணியில் இளம் வீரர்கள் பலரும் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில், நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் சேர்க்கப்படவில்லை. ஏற்கனவே ஆசிய கோப்பை தொடரில் சஞ்சு சாம்சன் மாற்று வீரராக மட்டுமே தேர்வு செய்யப்பட்டார். அதன்பின் கேஎல் ராகுல் இந்திய அணியுடன் இணைந்த பின், உடனடியாக வீட்டிற்கு அனுப்பப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஒருநாள் தொடரிலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் உலகக்கோப்பை தொடரிலும் சஞ்சு சாம்சன் கழற்றிவிடப்பட்ட நிலையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடருக்கும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. இது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனென்றால் கடைசியாக நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டு சிறப்பாக செயல்பட்டார். ஆனால் ஆசிய கோப்பை தொடருக்கான அணியில் மாற்று வீரராக சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்பட்டதால், அயர்லாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. அதேபோல் ஆசிய போட்டிகளுக்கான அணியிலும் சஞ்சு சாம்சன் தேர்வு செய்யப்படவில்லை. இதனால் சஞ்சு சாம்சன் தேர்வில் பிசிசிஐ அரசியல் செய்வதாக ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.