மும்பை: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தமிழக வீரர் சாய் கிஷோர் நீக்கப்பட்டுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் இந்திய அணி தோல்வியடைந்த நிலையில், உடனடியாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளது. நவ.23ஆம் தேதி முதல் டிசம்பர் 3ஆம் தேதி நடக்கவுள்ள இந்த டி20 தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த டி20 தொடருக்கு இந்திய அணியின் சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முதல்முறையாக சூர்யகுமார் யாதவ் கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதால், அவரின் செயல்பாடுகள் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. உலகக்கோப்பை தொடரில் சூர்யகுமார் யாதவ் மோசமான ஆட்டத்தை ஆடிய நிலையில், அவரின் டி20 போட்டிகளின் அனுபவம் காரணமாக கேப்டனாக தேர்வு செய்யப்பட்டுள்ளதாகவே பார்க்கப்படுகிறது.
இந்த டி20 தொடருக்கு ஆசிய போட்டிகள் மற்றும் அயர்லாந்து டி20 தொடரில் விளையாடிய வீரர்களே அதிகமாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மற்றபடி இஷான் கிஷன், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்ட வீரர்கள் தேர்வாகியுள்ளனர். அதேபோல் சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக வீரரான சாய் கிஷோர் நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
ஆசிய போட்டிகளில் 3 ஆட்டத்தில் ஆடிய அவர், 4 விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார். அதேபோல் ஆல்ரவுண்டராக சிறப்பாக செயல்படும் திறமை கொண்ட அவர், உள்ளூர் போட்டிகளில் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். மொத்தமாக 45 லிஸ்ட் ஏ போட்டிகளில் விளையாடியுள்ள சாய் கிஷோர் 73 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார்.
இன்னும் சொல்லப்போனால் இந்திய அணியில் ஜடேஜாவின் ரோலை அசால்ட்டாக செய்யும் திறமை கொண்டவர் சாய் கிஷோர். இவரும் வாஷிங்டன் சுந்தரும் இணைந்து ஆசிய போட்டிகளில் எதிரணிகளை துவம்சன் செய்தனர். இந்த நிலையில் காரணமின்றி இந்திய அணியில் இருந்து அவர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது தமிழ்நாடு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.