பெர்த்: 1952ஆம் ஆண்டுக்கு பின் ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்தில் முதல்முறையாக 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் இந்த 17 விக்கெட்டுகளையும் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இருப்பது ரசிகர்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் விளையாடி வருகின்றன. பெர்த் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். பின்னர் களமிறங்கிய இந்திய அணி நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் ரிஷப் பண்ட்-ன் பொறுப்பான ஆட்டத்தால், 150 ரன்கள் எடுத்தது.

ஆஸ்திரேலியா அணியின் ஹேசல்வுட் 4 விக்கெட்டுகளையும், ஸ்டார்க், கம்மின்ஸ் மற்றும் மிட்சல் மார்ஷ் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி யாரும் எதிர்பாராத வகையில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது. பும்ராவின் முதல் ஸ்பெல்லில் மெக்ஸ்வீனி, கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் ஆட்டமிழந்து வெளியேறினர்.
தொடர்ந்து டிராவிஸ் ஹெட் விக்கெட்டை ஹர்சித் ராணா வீழ்த்த, மிட்சல் மார்ஷ் மற்றும் லபுஷேன் விக்கெட்டை முகமது சிராஜ் வீழ்த்தி அசத்தினார். கடைசி ஸ்பெல்லில் கம்மின்ஸ் விக்கெட்டையும் பும்ரா வீழ்த்த, ஆஸ்திரேலியா அணி முதல் நாள் ஆட்டம் நேர முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறது. அலெக்ஸ் கேரி 19 ரன்களுடனும், மிட்சல் ஸ்டார்க் 6 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
ஆஸ்திரேலியா அணி 83 ரன்கள் பின் தங்கியுள்ள நிலையில், நாளைய ஆட்டத்தில் இந்திய அணி விரைவாக ஆல் அவுட் செய்ய முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய ஆட்டத்தில் மட்டும் மொத்தமாக 217 ரன்கள் சேர்க்கப்பட்டு, 17 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த 17 விக்கெட்டுகளையும் இரு அணிகளின் வேகப்பந்துவீச்சாளர்கள் வீழ்த்தி இருக்கின்றனர்.
அதேபோல் ஆஸ்திரேலியா மண்ணில் நடந்துள்ள டெஸ்ட் போட்டிகளில் 1952ஆம் ஆண்டுக்கு பின் முதல் நாள் ஆட்டத்தில் 16 விக்கெட்டுகள் வீழ்த்தப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும். இதன் மூலமாக இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இணைந்து 72 ஆண்டு கால சாதனையை முறியடித்துள்ளனர்.
அதெபெஓல் ஆஸ்திரேலியா அணி சொந்த மண்ணில் 40 ரன்களை சேர்ப்பதற்கும் 5 விக்கெட்டுகளை இழந்திருப்பது 2வது முறையாகும். இதற்கு முன்பாக தென்னாப்பிரிக்கா அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 17 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அதன்பின் இந்திய அணியிடம் தடுமாறி வருவது குறிப்பிடத்தக்கது.