அடிலெய்ட்: இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ள அடிலெய்ட் மைதானத்தின் பிட்சின் தன்மை குறித்து பார்க்கலாம். அதேபோல் டாஸ் வென்றால் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்பதையும், இதுவரை நடந்த போட்டிகளின் முடிவுகள் பற்றியும் பார்க்கலாம்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கும் பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், ரசிகர்களிடையே கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த முறையை போல் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகாமல், இந்திய அணி பதிலடி கொடுக்க வேண்டும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

அடிலெய்ட் மைதானத்தில் நடைபெற்ற பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி ஒருமுறை கூட தோல்வியடைந்ததில்லை. இதுவரை இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையில் 13 போட்டிகள் அடிலெய்ட் மைதானத்தில் நடந்துள்ளன. இதில் 2 வெற்றி, 10 தோல்வி, ஒரு டிரா என்று முடிவுகள் கிடைத்துள்ளன. இதனால் இந்திய அணி சுதாரித்து கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு வருகின்றன.
அடிலெய்ட் மைதானத்தை பொறுத்தவரை வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஸ்பின்னர்கள் என்று இரு தரப்புக்கும் உதவி அளிக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதுவரை வேகப்பந்துவீச்சாளர்கள் 173 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். அதேபோல் கடைசியாக நடைபெற்ற 7 போட்டிகளில் மட்டும் ஸ்பின்னர்கள் 47 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளனர்.
இதன் மூலமாக முதல் 2 நாட்கள் வேகப்பந்துவீச்சாளர்களுக்கும், அடுத்த 3 நாட்கள் ஸ்பின்னர்களும் ஆட்டத்திற்குள் இருப்பார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதேபோல் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த 82 டெஸ்ட் போட்டிகளில் 33 முறை டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்த அணிகளே வெற்றி பெற்றுள்ளன. 2 முறை மட்டுமே டாஸ் வென்று பவுலிங்கை தேர்வு செய்த அணிகள் வென்றிருக்கின்றன.
அதேபோல் அடிலெய்ட் மைதானத்தில் 4வது இன்னிங்ஸ் சேஸிங் செய்வது எளிதான விஷயமல்ல. இதுவரை வெற்றிகரமாக சேஸ் செய்யப்பட்ட இலக்கே 187 ரன்கள் தான். இதனால் டாஸ் வெல்லும் அணி, கட்டாயம் பேட்டிங்கை தேர்வு செய்ய வேண்டும் என்றே பார்க்கப்படுகிறது. ஆனால் நாளை காலை சில மணி நேரம் மழை பெய்வதற்கான வாய்ப்புகள் உள்ளது.
இதனால் பவுலர்களுக்கு சாதகமான சூழல் மற்றும் பிட்ச்-ஐ பயன்படுத்தி கொள்ளும் வகையில், டாஸ் வெல்லும் அணி பவுலிங்கை தேர்வு செய்யவும் வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அடிலெய்ட் மைதானத்தில் முதல் 2 நாட்களுக்கு பேட்ஸ்மேன்களின் சொர்க்க பிட்ச்-ஆக இருக்கும் என்றும் பார்க்கப்படுகிறது