பெர்த்: நியூசிலாந்து டெஸ்ட் தொடரின் போது ரன்களை குவிக்க முடியாத போது எனது சிந்தனை என்னவாக இருந்தது என்பதை மனைவி அனுஷ்கா சர்மா மட்டுமே அறிவார் என்று விராட் கோலி தெரிவித்துள்ளார். எந்த சூழலிலும் அனுஷ்கா சர்மா துணையாக நிற்பதாக கூறிய அவர், இந்த சதம் கூடுதல் ஸ்பெஷலானது என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி வெற்றிபெற 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. 3வது நாள் ஆட்டத்தை 172 ரன்களுடன் தொடங்கிய இந்திய அணி, 134.3 ஓவர்களில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 487 ரன்களை விளாசியது. முதல் இன்னிங்ஸில் பெற்ற 46 ரன்கள் முன்னிலையுடன், ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்தப் போட்டியில் சிறப்பாக விளையாடிய விராட் கோலி 143 பந்துகளில் 2 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட சதமடித்து அசத்தியுள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி அடிக்கும் 30வது சதம் இதுவாகும். அதேபோல் சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 81வது சதமாகும். நியூசிலாந்து டெஸ்ட் தொடரில் விராட் கோலி மோசமான ஃபார்மில் இருந்த நிலையில், ஆஸ்திரேலியா மண்ணில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மண்ணில் அதிக டெஸ்ட் சதங்களை விளாசிய ஆசிய வீரர் என்ற பெருமையையும் விராட் கோலி பெற்றுள்ளார். ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி அடிக்கும் 7வது சதம் இது. அதேபோல் 3 வடிவங்களிலும் சேர்த்து ஆஸ்திரேலியா மண்ணில் 10 சதங்களை விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் கிங் விராட் கோலி தனது கோட்டைக்கு திரும்பிவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இந்த சதத்திற்கு பின் தனது பேட்டிற்கு முத்தம் கொடுத்த விராட் கோலி, அதனை ரசிகர்கள் நோக்கி பறக்கவிட்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்டார். பின்னர் பெவிலியன் நோக்கி நடந்து வந்த விராட் கோலியிடம் ஆஸ்திரேலியா ஜாம்பவான் கில்கிறிஸ்ட் பேசினார். அப்போது விராட் கோலி கூறுகையில், எனது மனைவி அனுஷ்கா சர்மா ஒவ்வொரு ஏற்ற இறக்கங்களிலும் துணையாக இருந்து வருகிறார்.
அதனால் அவருக்கு என்ன நடக்கிறது என்பது நன்றாக தெரியும். நான் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போது, எனது சிந்தனை என்னவாக இருந்தது என்பதை அறிவார். சாதனைகள் செய்ய வேண்டும் என்பதற்காக ஒருநாளும் விளையாடியதில்லை. இந்திய அணிக்காக விளையாடும் ஒவ்வொரு போட்டியையும் பெருமையாக நினைக்கிறேன். அனுஷ்கா முன் இந்த சதம் விளாசியது இன்னும் மகிழ்ச்சியாக இருக்கிறது என்று தெரிவித்துள்ளார்.
2018ஆம் ஆண்டு நடந்த பார்டர் கவாஸ்கர் டிராபியில் விராட் கோலி அபாரமாக விளையாடி சதம் விளாசினார். தற்போது மீண்டும் அதே பெர்த் மைதானத்தில் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அதிக ரன்களை விராட் கோலி விளாசுவார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.