அடிலெய்ட்: இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அடைந்த தோல்வி காரணமாக, ஆஸ்திரேலியா அணியின் ஓய்வறையில் வீரர்களுக்கு இடையில் ஒற்றுமை இல்லாமல் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து அந்த அணியில் அதிரடி வீரர் டிராவிஸ் ஹெட் விளக்கம் அளித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் செய்த அணிகளிடையே ஒற்றுமை இல்லை என்று தான் இதுவரை அந்நாட்டு மீடியாக்கள் செய்திகளை வெளியிட்டுள்ளன. 2011-12ல் ஆஸ்திரேலியா சென்ற போது, இந்திய அணியின் சேவாக் உள்ளிட்ட சீனியர் வீரர்கள் தனியாக பயிற்சி மேற்கொள்வதாகவும், தோனி உள்ளிட்டோர் தனியாக பயிற்சி மேற்கொள்வதாகவும் அந்நாட்டு மீடியாக்கள் செய்தியை வெளியிட்டன.

அதேபோல் ஷிகர் தவான் மற்றும் விராட் கோலி இடையே பிரச்சனை என்று ஒருமுறை செய்தி வெளியிட்ட போது, இந்திய அணியின் கேப்டன் தோனி ஒட்டுமொத்த இந்திய அணி வீரர்களையும் செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைத்து வந்து பதிலடி கொடுத்தார். இப்படி எதிரணிகளை எப்படியெல்லாம் பதற்றப்படுத்தி குழப்ப முடியுமோ, அப்படியெல்லாம் ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி செயல்படும்.
ஆனால் பெர்த் மைதானத்தில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்தி இருப்பது பல்வேறு சிக்கல்களை அந்த அணிக்குள் உருவாக்கியுள்ளது. பெர்த் டெஸ்ட் போட்டிக்கு பின் செய்தியாளர்களை சந்தித்த ஹேசல்வுட், அடுத்தப் போட்டியில் எப்படி கம்பேக் கொடுக்க போகிறீர்கள் என்ற கேள்வியை பேட்ஸ்மேன்களிடம் தான் கேட்க வேண்டும் என்று நினைக்கிறேன்.
ஏனென்றால் நான் பிசியோவிடம் சென்று சிகிச்சை எடுத்து கொள்ள போகிறேன். அதன்பின் 2வது டெஸ்ட் போட்டிக்கான திட்டங்கள், எந்த பேட்ஸ்மேனுக்கு எப்படி பவுலிங் செய்யலாம் என்பது குறித்து ஆலோசனை செய்வோம் என்று தெரிவித்தார். இது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஒட்டுமொத்த பேட்ஸ்மேன்களையும் ஹேசல்வுட் விட்டுக் கொடுத்ததால், அந்த அணிக்குள் பிரச்சனை ஏற்பட்டதாக பேச்சுகள் எழுந்தன.
இதுதொடர்பாக கில்கிறிஸ்ட் பேசுகையில், ஹேசல்வுட்டின் பேச்சு ஓய்வறையின் சூழல் நன்றாக இல்லை என்பதை காட்டுகிறது என்று கூறினார். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்குள் மோதல் ஏற்பட்டுள்ளதாக மீடியாக்களில் செய்திகள் வெளியாகின. இதுகுறித்து டிராவிஸ் ஹெட் பேசுகையில், கடந்த வாரத்தில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்திய பின், ஹேசல்வுட்டின் கருத்தை மக்கள் வேறு மாதிரி புரிந்து கொண்டார்கள் என்று நினைக்கிறேன்.
நேற்றிரவு கூட அனைவரும் இணைந்து நேரம் செலவிட்டோம். இந்த ஒரு தோல்வியால் ஓய்வறையிலும், அணி வீரர்களுக்கு இடையிலும் எந்த மாற்றமும் இல்லை. வெற்றி, தோல்வி, டிரா என்று எந்த முடிவாக இருந்தாலும், நாங்கள் ஒன்றாக எதிர்கொள்கிறோம். பெர்த் டெஸ்ட் தோல்வியால் ஏமாற்றம் அடைந்ததில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால் வீரர்களிடையே எந்த மோதலோ, பிரிவோ இல்லை என்று தெரிவித்துள்ளார்.