பெர்த்: முதல் நாள் ஆட்டத்தில் பேட்டிங்கில் கொஞ்சம் கவனமாக இருந்திருந்தால் ஆட்டத்தின் முடிவு வேறு மாதிரி அமைந்திருக்கும் என்று ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் தெரிவித்துள்ளார். முக்கிய தருணங்களில் மோசமாக செயல்பட்டதாக கூறிய கம்மின்ஸ், அடுத்தப் போட்டிக்கு சிறப்பாக தயாராகுவோம் என்று கூறியுள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை பெற்றுள்ளது. பவுன்ஸ் அதிகமாக இருக்கும் பெர்த் மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்களை அச்சுறுத்தலாம் என்று ஆஸ்திரேலியா அணியின் கனவை கலைத்து இந்திய அணி மிகப்பெரிய எழுச்சியை கண்டுள்ளது.

சொந்த கையில் சூனியம் வைத்ததை போல் எந்த பேஸை வைத்து இந்திய அணியை அச்சுறுத்தலாம் என்று ஆஸ்திரேலியா அணி நினைத்ததோ, அதேபோல் பேஸை வைத்து இந்திய அணியின் கேப்டன் பும்ரா வேற லெவல் சம்பவத்தை நடத்தி முடித்திருக்கிறார். இதனால் சொந்த மண்ணிலேயே இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரை தோல்வியுடன் ஆஸ்திரேலியா அணி தொடங்கி இருக்கிறது.
இந்த தோல்வி குறித்து ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் பேசுகையில், இந்த தோல்வி நிச்சயம் மிகப்பெரிய ஏமாற்றமாக உள்ளது. இந்த தொடருக்காக மிகச்சிறப்பாக தயாராகி வந்தோம். சரியாக திட்டமிட்டும் நாங்கள் எதிர்பார்த்தபடி சில விஷயங்களை நடக்கவில்லை. அதுதான் வெற்றிக்கும் தோல்விக்கும் இடையிலான வித்தியாசமாக அமைந்தது.
இந்த தோல்விக்கு பின் உடனடியாக முழித்து கொள்ள வேண்டும் என்று நன்றாக அறிவேன். அடுத்த 2 நாட்கள் ஓய்வு எடுத்த பின், அடிலெய்ட் டெஸ்ட் போட்டிக்கான பயிற்சியில் ஈடுபட வேண்டும். இந்தப் போட்டியின் ஏராளமான தருணங்களை சிறப்பாக கையாள தவறிவிட்டோம். முதல் நாளின் இறுதியில் சிறப்பாக பேட்டிங் செய்திருந்தால், எல்லாம் சரியாக நடந்திருக்கும்.
ஆஸ்திரேலியா அணியில் அனுபவ வீரர்கள் அதிகம் உள்ளனர். அதனால் அதிகமாக விவரிக்க தெவையில்லை. அடுத்தப் போட்டிக்கு முன்பாக ஏராளமான ஆலோசனைகளை நிச்சயம் செய்வோம். அதேபோல் அடிலெய்ட் பிட்சில் என்ன செய்ய வேண்டும் என்பதையும் திட்டமிடுவோம் என்று தெரிவித்துள்ளார். அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள டெஸ்ட் போட்டி பகலிரவு போட்டியாக நடக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.