அடிலெய்ட்: 2024ஆம் ஆண்டில் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. இந்த சாதனையை எட்ட இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான பும்ராவுக்கு ஒரு விக்கெட்டும், அஸ்வினுக்கு 4 விக்கெட்டுகளும் வீழ்த்த வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள பிங்க் பால் டெஸ்ட் போட்டிக்காக இந்திய அணி வீரர்கள் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இதற்காக 2 நாட்கள் பயிற்சிப் போட்டிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் மழை காரணமாக முதல் நாள் ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவுக்கு வந்திருக்கிறது. இதனால் நாளைய ஆட்டத்தில் இரு அணிகளும் தலா 50 ஓவர்கள் விளையாட ஒப்புக் கொண்டுள்ளனர்.

பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய வீரர்கள் பலரும் கூடுதல் கவனம் செலுத்தி வருகின்றனர். ஏனென்றால் சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சிராஜ் உள்ளிட்டோர் கூட பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடியதில்லை. பிட்ச் எப்படி செயல்படும், பிங்க் பாலின் தன்மை உள்ளிட்டவை குறித்து அறிந்து கொள்ள இந்திய அணி வீரர்கள் கூடுதலாக பணியாற்றி வருகின்றனர்.
இதனிடையே அடிலெய்ட் மைதானத்தில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரிட் பும்ரா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் இருவருக்கும் முக்கியமான சாதனை ஒன்றை படைக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. 2024ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை எந்த வீரரும் 50 விக்கெட்டுகளை வீழ்த்தவில்லை.
இந்திய அணியின் நட்சத்திர வீரரான ஜஸ்பிரிட் பும்ரா இதுவரை 10 போட்டிகளில் விளையாடி 49 விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து இந்திய அணியின் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் 10 போட்டிகளில் விளையாடி 46 விக்கெட்டுகளை வீழ்த்தி 2வது இடத்தில் இருக்கிறார். ஜடேஜா 44 விக்கெட்டுகளை வீழ்த்தி 4வது இடத்தில் இருக்கிறார்.
இதனால் நடப்பாண்டில் 50 விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற சாதனையை படைக்க இருவருக்கும் வாய்ப்பு அமைந்துள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் அஸ்வின் விளையாடியுள்ள 2 போட்டிகளில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இன்னொரு பக்கம் பும்ரா முதல் டெஸ்ட் போட்டியிலேயே 8 விக்கெட்டுகளை வீழ்த்தி உச்சக்கட்ட ஃபார்மில் இருக்கிறார்.
இதன் காரணமாக அடிலெய்ட் மைதானத்தில் 50 விக்கெட்டுகளை வீழ்த்தி சாதனை படைக்கப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே எழுந்துள்ளது. மேலும் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான வாஷிங்டன் சுந்தர் நீக்கப்பட்டு, அவரது இடத்தில் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.