அடிலெய்ட்: இந்திய அணியின் ஜாம்பவான் வீரரான விராட் கோலி மீது இனியும் சந்தேகப்படுபவர்களுக்கு "ரெஸ்ட் இன் பீஸ்" என்று ஜடேஜா பதிலடி கொடுத்துள்ளார். அதேபோல் ஜீனியஸ்கள் ஒருநாளில் உருவாகுவதில்லை என்று கூறிய அவர், பெர்த் சதம் தான் விராட் கோலி யார் என்று நிரூபித்துள்ளதாக கூறியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவதற்காக இந்திய அணி தயாராகி வருகிறது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ள பகல் இரவு டெஸ்ட் போட்டி என்பதால், கூடுதல் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் கடந்த முறை இதே மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்டில் தான் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.

ஆனாலும் அடிலெய்ட் மைதானத்தில் விராட் கோலி அதிக சதங்களை விளாசி இருக்கிறார். அதுமட்டுமல்லாமல் பெர்த் டெஸ்டிலேயே ஃபார்முக்கு திரும்பிய அவர், இம்முறை இந்திய அணியை வெற்றி பெற வைப்பார் என்று ரசிகர்கள் பலரும் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர். இதனிடையே நியூசிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின் ஃபார்மில் இல்லாத விராட் கோலி மீது கடுமையான விமர்சனங்கள் வந்தன.
இப்போதும் சில தரப்பினர் விராட் கோலி ஃபார்மில் இல்லை என்று திட்டமிட்டு விமர்சித்து வருகின்றனர். இதுகுறித்து இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா பேசுகையில், வயது என்பது ஒரு நம்பர் மட்டுமே என்பதை விராட் கோலி முதல் டெஸ்ட் போட்டியிலேயே நிரூபித்துவிட்டார். அதேபோல் அடுத்த 4 டெஸ்ட் போட்டிக்கான எதிர்பார்ப்பையும் அதிகப்படுத்திவிட்டார்.
இதுபோன்ற ஒரு இன்னிங்ஸில் சதம் அடிப்பது தான் அந்த வீரரின் வரலாற்றையே கூறும். அதேபோல் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் நினைவில் இருக்கும். என்னை பொறுத்தவரை விமர்சனங்களை அமைதிபடுத்த விராட் கோலி என்ற பெயரே போதுமானது. பெர்த் மைதானத்தில் விராட் கோலி அடித்த சதம், அவர் மீதான சந்தேகங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது.
இனியும் சந்தேகப்படுபவர்களுக்கு "ரெஸ்ட் இன் பீஸ்" தான் சொல்ல விரும்புகிறேன். ஏனென்றால் ஒரு நாள் இரவில் எந்த கிரிக்கெட் வீரரும் ஜீனியஸாக மாறிவிட முடியாது என்று தெரிவித்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாக விராட் கோலி ஸ்பின்னர்களிடம் மட்டுமே அதிகளவில் விக்கெட்டுகளை கொடுத்து வந்தார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக மிகச்சிறந்த ஃபார்மில் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.