பெர்த்: பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக 5 முறை ஆஸ்திரேலியாவிற்கு பயணித்துள்ள போதும், 38 வயதாகும் சீனியர் வீரரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருமுறை கூட பெர்த் மைதானத்தில் விளையாட இந்திய பிளேயிங் லெவனில் சேர்க்கப்படவில்லை என்ற சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இந்த மைதானத்தில் இதுவரை நடந்துள்ள 4 போட்டிகளிலும் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்யும் அணிகளே வென்றுள்ளன.

இதன் காரணமாக இந்திய அணி முதல் பேட்டிங்கை தேர்வு செய்திருக்கலாம் என்று பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி 60 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்திய அணியின் இளம் வீரர்களான யஷஸ்வி ஜெய்ஸ்வால் மற்றும் தேவ்தத் படிக்கல் இருவரும் டக் அவுட்டாகி வெளியேறி இருக்கின்றனர்.
அதேபோல் இந்தப் போட்டியில் இந்திய அணியின் சீனியர் ஸ்பின்னர்களான அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவரும் சேர்க்கப்படவில்லை. ஒரேயொரு ஸ்பின்னரான வாஷிங்டன் சுந்தர் மட்டுமே தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். 2018ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெர்த் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய ஆட்டத்திலும் அஸ்வின் சேர்க்கப்படவில்லை.
அதுமட்டுமல்லாமல் பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்காக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் இதுவரை 5 முறை ஆஸ்திரேலியாவுக்கு வந்திருக்கிறார். 2011-12, 2014-15, 2018-19, 2020-21 மற்றும் 2024-2025 என்று 5 முறை வந்துள்ள போதும், பெர்த் மைதானத்தில் ரவிச்சந்திரன் அஸ்வின் ஒருமுறை கூட விளையாடவில்லை என்பது தெரிய வந்துள்ளது.
இந்தப் போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் கவாஜா, அலெக்ஸ் கேரி, டிராவிஸ் ஹெட், மிட்சல் ஸ்டார்க் என்று 4 இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்த போதும், அஸ்வின் தேர்வு செய்யப்படவில்லை. பெர்த் மைதானம் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும் என்றாலும், ஆஸ்திரேலியா அணியின் நேதன் லயன் 27 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார்.
பெர்த் மைதானத்தில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களின் பட்டியலில் நேதன் லயன் முதலிடத்தில் இருக்கிறார். பிட்சில் பவுன்ஸ் இருக்கும் என்பதால், டாப் ஸ்பின் வகையிலான பந்துகளில் பேட்ஸ்மேன்கள் அதிகமாக விக்கெட்டை கொடுத்து வந்துள்ளனர். இதனால் அஸ்வின் நிச்சயம் களமிறக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் புறக்கணிக்கப்பட்டிருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.