பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவின் கேப்டன்சி அசத்தலாக இருந்ததாக பாராட்டுகள் குவிந்து வருகிறது. 27 ஓவர்களையும் 3 வேகப்பந்துவீச்சாளர்களை மட்டுமே வைத்து வீசியது எப்படி என்று பலரும் ஆச்சரியத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.
இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா சொந்த காரணங்களால் பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில் விளையாட மாட்டார் என்று 10 நாட்களுக்கு முன்பே தெரிய வந்தது. இதனால் மாற்று கேப்டனாக ஜஸ்பிரிட் பும்ரா செயல்படுவார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டது. ஆனால் பும்ராவை சாதாரணமாக எண்ணிய ஆஸ்திரேலியா பத்திரிகையாளர்கள், அவரை செய்தியாளர்கள் சந்திப்பிலேயே கிண்டல் செய்தனர்.

ஆனால் பெர்த் டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டத்திலேயே ஜஸ்பிரிட் பும்ரா பலருக்கும், தான் எப்படியான கேப்டன் என்பதை நிரூபித்து காட்டி இருக்கிறார். இந்திய அணி முதல் இன்னிங்ஸில் வெறும் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. 30 ஓவர்களுக்கு பின் பந்து நன்றாக பேட்டிற்கு வந்த நிலையில், இந்திய அணியின் பேட்ஸ்மேன்களில் ஒருவர் கூட நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை.
இதனை பவுலிங்கின் போதே ஆஸ்திரேலியா அணி வீரர்களும் கணித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணி களமிறங்கி முதல் நாள் ஆட்டத்தில் 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி இருக்கிறது. இதற்கு முக்கியக் காரணமாக இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா முடிவு தான் அமைந்துள்ளது.
ரிஷப் பண்ட் மற்றும் நிதீஷ் குமார் ரெட்டி பேட்டிங் செய்த போது, ஆஸ்திரேலியா அணி நேதன் லயனை அட்டாக்கில் கொண்டு வந்தது. இதனை பயன்படுத்தி ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி இருவரும் சில பவுண்டரிகளை விளாசி தள்ளினர். ஆனால் இந்திய அணி பவுலிங்கில் 3 முதல்நிலை வேகப்பந்துவீச்சாளர்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டனர்.
பும்ரா, முகமது சிராஜ் மற்றும் ஹர்சித் ராணா ஆகிய 3 பவுலர்கள் மட்டுமே மீண்டும் மீண்டும் அட்டாக் செய்து கொண்டே இருந்தனர். ஒவ்வொரு பவுலருக்கும் சரியான ஓவரில் ஸ்பெல்லை முடித்து ஓய்வு கொடுத்ததோடு, நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் வாஷிங்டன் சுந்தர் இருவருக்கும் ஓவர் கொடுக்க கூடாது என்பதில் தெளிவாக இருந்தார்.
ஆஸ்திரேலியா அணி பேட்ஸ்மேன்களுக்கு கொஞ்சம் கூட இடம் கொடுக்க கூடாது என்பதில் பும்ரா தெளிவாக இருந்தார். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ரெஸ்ட் டைம் கொடுப்பதற்காக ஸ்பின்னரையோ அல்லது பார்ட் டைம் பவுலரையோ கொண்டு வந்தால், அது ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்கள் செட்டாலாகவோ அல்லது ரன்கள் சேர்க்கவோ உதவியாக இருக்கும்.
இதனால் ஒவ்வொரு வேகப்பந்துவீச்சாளருக்கும் 5 ஓவர்கள் அல்லது 6 ஓவர்கள் ஸ்பெல்லாக கொடுத்து பும்ரா ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன்களை மிரட்டினார். அதேபோல் ஆஸ்திரேலியா மைதானத்தின் விராட் கோலிக்கு இருக்கும் அனுபவத்தை பயன்படுத்தும் வகையில், முகமது சிராஜ் மற்றும் ஹர்சித் ராணா இருவருக்கும் விராட் கோலியின் மூலமாக ஆலோசனைகளை வழங்க வைத்தார். இதனால் ரசிகர்கள் பும்ராவை நிரந்தர கேப்டனாக்கும் நேரம் வந்துவிட்டதாக பாராட்டி வருகின்றனர்.