பெர்த்: ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்கள் பவுன்சர்களை வீசினால் துப்பாக்கி குண்டுகளை நாட்டுக்காக நேரடியாக நெஞ்சில் வாங்குவதை போல் தைரியமாக எதிர்கொள்ள வேண்டும் என்று பயிற்சியாளர் கவுதம் கம்பீர் கூறிய வார்த்தைகள் உதவியாக இருந்ததாக இந்திய வீரர் நிதீஷ் குமார் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் அறிமுக வீரர் நிதீஷ் குமார் ரெட்டியின் பேட்டிங் பலரையும் ஈர்த்துள்ளது. வலிமை வாய்ந்த ஆஸ்திரேலியா வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிரான எந்தவித அச்சமும் இல்லாமல் விளையாடி 41 ரன்களை சேர்த்தது அனைவரையும் திரும்பி பார்க்க வைத்துள்ளது.

அறிமுகப் போட்டியிலேயே இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோர் அடித்த வீரராக உயர்ந்துள்ளார். அதேபோல் டெய்லண்டர்களுடன் விளையாடும் போது அதிகமாக பவுண்டரி அடிக்க வேண்டும் என்ற தெளிவை 21 வயதிலேயே நிதீஷ் குமார் ரெட்டி பெற்றுள்ளார். உள்ளூர் கிரிக்கெட்டிலேயே போதிய அனுபவமில்லாத அவர், நேரடியாக ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கி அசத்தி இருக்கிறார்.
இதுகுறித்து செய்தியாளர்களை சந்தித்து நிதீஷ் குமார் ரெட்டி பேசுகையில், பெர்த் மைதானம் பற்றி ஏராளமான விஷயங்களை கேட்டிருக்கிறேன். கடந்த முறை பயிற்சி மேற்கொண்டதும் அப்படியே நினைவில் இருக்கிறது. பயிற்சிக்கு பின் கவுதம் கம்பீர் சாருடன் ஆலோசிக்கும் போது அவர், நீ பேட்டிங் செய்யும் போது பவுன்சர் பந்துகளை எதிர்கொள்ள நேர்ந்தால், துப்பாக்கி புல்லட்டை நெஞ்சில் வாங்குவதை போல் தைரியமாக பேட்டிங் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
கவுதம் கம்பீரின் வார்த்தைகள் எனக்கு உதவியாக இருந்தது. எனது தன்னம்பிக்கையை அதிகரித்தது என்றும் சொல்லலாம். இந்திய டெஸ்ட் அணிக்காக அறிமுகமானது அட்டகாசமான உணர்வாக உள்ளது. அதேபோல் சிறுவயதில் இருந்தே எனது ரோல்மாடலான விராட் கோலியிடம் இருந்து டெஸ்ட் தொப்பியை பெற்றுக் கொண்டது கூடுதல் சந்தோஷம். பேட்டிங்கின் போது எனது திட்டங்களுடன் தான் களமிறங்கினேன். எனக்கு உதவியாக அட்டாக்கிங் பேட்ஸ்மேனான ரிஷப் பண்ட் களத்தில் இருந்தார்.
எங்களின் பார்ட்னர்ஷிப்பின் போது ரிஷப் பண்ட் பல்வேறு ஆலோசனைகளையும் வழங்கினார். நேதன் லயன் வீசிய பந்துகளில் பெரிதாக டிரிஃப்ட்-கள் இல்லை. அதனால் அவரின் பந்தில் விரைவாக ரன்கள் சேர்க்கலாம் என்று முடிவு எடுத்து அட்டாக் செய்தோம். இந்த பிட்சில் பவுலர்களுக்கு நிச்சயமாக உதவி இருக்கிறது. விக்கெட்டுகளை வீழ்த்துவதற்காக நிறைய முயற்சிகளை செய்ய தேவையில்லை.
தேவையான ஒழுக்கத்துடன் பவுலிங் செய்தாலே போதுமானது. சரியான லெந்தில் பவுலிங் செய்தாலே, விக்கெட்டுகளை வீழ்த்த முடியும். ஜஸ்பிரிட் பும்ரா ஒரு கேப்டனாக மிகச்சிறப்பாக செயல்படுகிறார். பவுலர்களின் ஸ்பெல்லை சரியான நேரத்தில் மாற்றினார். தொடக்கம் முதலே ஒரேயொரு மெசேஜ் தான் சொல்லப்பட்டது. நாம் பேசத் தேவையில்லை, நமது கையில் இருக்கும் பந்து பேசட்டும் என்பதே என்று கூறியுள்ளார்.