அடிலெய்ட்: இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி அடிலெய்ட் மைதானத்தில் நாளை மறுநாள் நடக்கவுள்ளது. பிங்க் பால் டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய வீரர்கள் கூடுதல் கவனத்துடன் தயாராகி வருகின்றனர். இதனிடையே இந்திய அணியுடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் காயத்தில் இருந்து குணமடைந்த சுப்மன் கில் இருவரும் இணைந்துள்ளனர்.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்திய கேஎல் ராகுல், எந்த பேட்டிங் வரிசையில் விளையாடுவார் என்ற கேள்வி எழுந்தது. பயிற்சிப் போட்டியில் ரோஹித் சர்மா மிடில் ஆர்டரில் களமிறங்கி விளையாடி இருந்தாலும், கடைசி நேரத்தில் கூட இந்திய அணியின் பேட்டிங் வரிசை மாற்றப்பட வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் செய்தியாளர்களை இந்திய அணியின் கேஎல் ராகுல் சந்தித்த போது, உங்களின் பேட்டிங் வரிசை குறித்து சொல்லப்பட்டுவிட்டதா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், என்னிடம் கூறிவிட்டார்கள். அந்த தகவலை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் கூறியுள்ளார்கள் என்று பதில் அளித்தார்.
பின்னர் தொடக்க வீரர், மிடில் ஆர்டர்.. இரண்டில் உங்களுக்கு எந்த வரிசையில் விளையாடுவது எளிதாக இருக்கும் என்ற கேள்விக்கு, எப்போதும் பேட்டிங் வரிசை பற்றி கவலை கொண்டதில்லை. இந்திய அணியின் பிளேயிங் லெவனில் இருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கம். எந்த பேட்டிங் ஆர்டரில் வேண்டுமானாலும் களமிறங்க தயாராக இருக்கிறேன்.
பெஞ்சில் இருப்பதோடு, இந்திய அணிக்காக விளையாடுவதே ஆசை என்றார். தொடர்ந்து, சூழலுக்கு ஏற்ப ரன்களை குவிக்க வேண்டும். அதிர்ஷ்டவசமாக நான் பல்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கியுள்ளேன். தொடக்க காலத்தில் வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்க கேட்ட போது, மனதளவில் தயாராக கடினமாக இருந்தது.
முதல் 20 முதல் 25 பந்துகளை எப்படி அணுக வேண்டும், எந்த நேரத்தில் அட்டாக் செய்ய வேண்டும் என்பது போன்ற பிரச்சனைகள் என்னுள் இருந்தன. ஆனால் தொடர்ந்து வெவ்வேறு பேட்டிங் வரிசையில் களமிறங்கிய போது எனக்கு பழக்கமாகிவிட்டது. ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடரில் தொடக்கம் கொடுக்க தயாராக இருக்குமாறு முன்னதாக அறிவுறுத்தினார்கள்.
நியூசிலாந்து டெஸ்ட் தொடரை முழுமையாக விளையாடாததால், தொடக்க வீரராக தயாராக போதுமான நேரம் கிடைத்தது. டெஸ்ட் கிரிக்கெட்டில் நான் அதிகமாக தொடக்கம் கொடுத்துள்ளேன். அதனால் எப்படி ரன்கள் சேர்க்க வேண்டும் என்பதை நன்றாக அறிவேன். முதல்முறையாக பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் விளையாடவுள்ளேன்.
இந்திய அணியில் இருக்கும் மற்ற வீரர்களை போல் எனக்கு பிங்க் பால் டெஸ்டில் விளையாடிய அனுபவம் கிடையாது. அதனால் பிங்க் பால் போட்டிகளில் விளையாடிய அனுபவம் கொண்ட வீரர்களிடம், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்ய வேண்டும் என்று கேட்டறிந்து வருகிறேன். பயிற்சி போட்டிகளில் விளையாடிய வரை, பிங்க் பாலை கண்காணிப்பது வித்தியாசமாக உள்ளது என்று தெரிவித்துள்ளார்.