பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் அனுபவ வீரரான கேஎல் ராகுலுக்கு 3வது நடுவர் தவறான தீர்ப்பு வழங்கியது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதன் ரீபிளேவில் கேஎல் ராகுலின் பேட் பந்தில் உரசாதது தெரிய வந்ததையடுத்து, இந்திய முன்னாள் வீரர்கள் ஆஸ்திரேலியாவை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. பெர்த் மைதானத்தில் தொடங்கிய போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா பேட்டிங்கை தேர்வு செய்தார். இதன்பின் இந்திய அணியின் ஜெய்ஸ்வால் - கேஎல் ராகுல் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இதில் ஜெய்ஸ்வால் டக் அவுட்டாகி வெளியேற, பின்னர் வந்த படிக்கலும் டக் அவுட்டாகினார்.

பின்னர் வந்த விராட் கோலியும் ஏமாற்றம் அளிக்க, மறுபக்கம் கேஎல் ராகுல் மிகச்சிறந்த இன்னிங்ஸை வெளிப்படுத்தி வந்தார். ஆஸ்திரேலியா மண்ணில் எப்படியான ஒரு இன்னிங்ஸை விளையாட வேண்டுமோ, அப்படியான ஆட்டத்தை ஆடினார். டெக்னிக்கலாகவும் அசத்திய கேஎல் ராகுல், மிகப்பெரிய ஸ்கோரை அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.
பந்தை லீவ் செய்வது, ஸ்விங்கை கணித்து டிஃபென்ஸ் ஆடுவது, 5வது ஸ்டம்ப் லைனிற்கு வெளியில் வரும் பந்துகளை கவர்ஸ் திசையில் பவுண்டரி அடிப்பது என துல்லியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தார். ஆனால் திடீரென மிட்சல் ஸ்டார்க் வீசிய பந்து கேஎல் ராகுல் பேட்டில் உரசி விக்கெட் கீப்பர் கைகளில் சென்று விழுந்தது. ஆனால் கள நடுவர் அவுட் கொடுக்கவில்லை. கேஎல் ராகுலும் எந்த பதற்றமும் கொள்ளவில்லை.
இருந்தாலும் ஆஸ்திரேலியா கேப்டன் பேட் கம்மின்ஸ் உடனடியாக டிஆர்எஸ் கோரினார். அப்போது ஸ்னிக்கோவில் பார்த்த போது பந்து பேட்டை உரசியதாக காட்டப்பட்டது. இதன்பின் 3வது நடுவர் வேறு கேமரா ஆங்கிளில் காட்டுமாறு கோரிக்கை வைத்த போது, அவருக்கு வேறு ஆங்கிளில் கேஎல் ராகுல் ஆடியது காட்டப்படவில்லை. இதனால் ஸ்னிக்கோவில் உரசல் இருந்ததை வைத்து உடனடியாக அவுட் என்று தீர்ப்பளித்தார்.
ஆனால் அடுத்த சில நிமிடங்களில் காட்டப்பட்ட ரீபிளேவில் ஸ்னிக்கோவில் வந்த உரசல் கேஎல் ராகுலின் பேட் அவரின் கால் பேடில் உரசிய போது ஏற்பட்டது தெரிய வந்தது. கேஎல் ராகுல் பேட்டிற்கும் பந்திற்கும் எந்த உரசலும் இல்லை என்று தெரிய வந்த நிலையில், இந்திய அணியின் முன்னாள் வீரர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

இதுகுறித்து முன்னாள் வீரர் வாசிம் ஜாஃபர், 3வது நடுவர் வேறு ஆங்கிளில் காட்சிகளை காட்டுமாறு கேட்ட போது, அது வழங்கப்படவில்லை. அவுட்டா இல்லையா என்பதை முடிவு செய்ய முடியாத போது தான் நடுவர்கள் வேறு கேமரா ஆங்கிளை கேட்பார்கள். ஒருவேளை அவுட்டா, இல்லையா என்ற சந்தேகம் இருக்கும் போது, எதற்காக கள நடுவரின் முடிவை மாற்றுமாறு சொல்ல வேண்டும். டெக்னாலஜி மிகவும் மோசமாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று விமர்சித்துள்ளார்.

அதேபோல், முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா, "என்ன மாதிரியான முடிவு இது.. மிகப்பெரிய ஜோக்" என்று காட்டமாக பதிவிட்டுள்ளார். அதேபோல் முரளி கார்த்திக், ஆட்டம் தொடங்கும் போது மில்லியன் கேமராக்களை பார்த்தோம். ஆனால் பேட்ஸ்மேனின் விக்கெட்டை பறிசோதனை செய்ய, வேறு கேமரா ஆங்கிள் கேட்ட போது மட்டும், கேமரா அங்கு இல்லை. இது ஆச்சரியமாக உள்ளது என்று கூறியுள்ளார்.