அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேஎல் ராகுல் - ஜெய்ஸ்வால் கூட்டணியை தொடக்க வீரர்களாக களமிறக்க வேண்டும் என்று புஜாரா தெரிவித்துள்ளார். ஒருவேளை ரோஹித் சர்மா தொடக்கம் கொடுத்தால், கேஎல் ராகுலை நம்பர் 3ல் களமிறக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி டிச.6ஆம் தேதி அடிலெய்ட் மைதானத்தில் தொடங்கவுள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியாக நடக்கவுள்ளதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் இணைய உள்ளது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.

இதனால் தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் நீக்கப்படுவார்கள் என்றாலும், கேஎல் ராகுல் எந்த பேட்டிங் வரிசையில் களமிறங்குவார் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா மண்ணில் புதிய பந்தை எப்படி விளையாட வேண்டும் என்று கேஎல் ராகுல் ஒவ்வொரு இந்திய வீரருக்கும் பாடம் எடுத்து சென்றார்.
இதுகுறித்து இந்திய அனுபவ வீரரான புஜாரா பேசுகையில், ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரில் எந்த மாற்றமும் செய்யப்பட கூடாது என்று விரும்புகிறேன். ஒருவேளை ரோஹித் சர்மா தொடக்க வீரராக களமிறங்க விரும்பினால், கேஎல் ராகுலை நம்பர் 3ல் களமிறக்க வேண்டும்.
டாப் ஆர்டரில் இருந்து கேஎல் ராகுல் ஒருபோதும் மாற்றம் செய்யக் கூடாது. ஏனென்றால் கேஎல் ராகுல் ஆட்டத்திற்கு டாப் 3 பேட்டிங் வரிசையில் விளையாடுவதே பொருத்தமானதாக இருக்கும். இதன்பின் விராட் கோலி நம்பர் 4ல் களமிறங்கலாம். ஒருவேளை சுப்மன் கில் இந்திய அணியில் சேர்க்கப்பட்டால், அவரை நம்பர் 5ல் விளையாடலாம் என்று நினைக்கிறேன். சுப்மன் கில் புதிய பந்திலும் விளையாடக் கூடியவர்.
ஒருவேளை 25 முதல் 30 ஓவர்களை முடிவடைந்த பின், பந்து தேய்மானமடைய தொடங்கும் போது சுப்மன் கில் களத்திற்கு வந்தால், அவரின் ஷாட்களை மிகவும் எளிதாக விளையாட முடியும். ஒருவேளை இந்திய அணி 2 அல்லது 3 விக்கெட்டுகளை விரைவாக இழந்தால், ரிஷப் பண்ட்-ஐ காக்கும் வகையில் சுப்மன் கில் நம்பர் 5ல் இருப்பார். ஏனென்றால் ரிஷப் பண்ட் புதிய பந்தில் விளையாடுவதில் கூடுதல் ரிஸ்க்.
என்னை பொறுத்தவரை ரிஷப் பண்ட் பழைய பந்தில் விளையாடுவதே இந்திய அணிக்கு நன்மையை கொடுக்கும். அதன்பின் ஆல்ரவுண்டர்களான நிதீஷ் குமார் ரெட்டி, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் களமிறங்கலாம். அதேபோல் பவுலிங்கில் எந்த மாற்றமும் செய்ய தேவையில்லை என்று நினைக்கிறேன். பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் மிகச்சிறப்பாக செயல்பட்டார்கள்.
அவர்களுக்கு ஹர்சித் ராணா மிகப்பெரிய உதவியாக செயல்பட்டார். அவர் அறிமுக டெஸ்டில் விளையாடியதால், அவரை எந்த குறையும் சொல்ல தேவையில்லை. அஸ்வின், ஜடேஜா, ஆகாஷ் தீப், பிரசித் கிருஷ்ணா உள்ளிட்டோருக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டாம். வாஷிங்டன் சுந்தர் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டதற்கு அவரின் பேட்டிங் மிக முக்கியக் காரணம்.
2வது டெஸ்ட் போட்டியில் பேட்டிங் செய்யக் கூடிய வீரர்கள் அவசியமானவர்கள் என்று கருதுவேன். ஏனென்றால் ஆஸ்திரேலியா மைதானத்தின் பிட்சில் கூடுதல் பவுன்ஸ் கிடைக்கும். அந்த பவுன்ஸை மட்டும் பயன்படுத்த வேண்டும் என்று நினைக்காமல், வாஷிங்டன் சுந்தர் லெந்த் மற்றும் சரியான இடத்தில் பிட்ச் செய்வதில் கவனமாக இருந்தார்.
அதனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் இந்திய அணி அதே பவுலிங் அட்டாக்குடன் களமிறங்க வேண்டும். நிதீஷ் குமார் ரெட்டியுடன் சேர்த்து 4 வேகப்பந்துவீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் செல்வது சரியான சிந்தனை. ஆஸ்திரேலியா மைதானங்களில் டவுன் தி ஆர்டர் பேட்ஸ்மேன்களின் பங்களிப்பு மிகவும் அவசியமானது என்றும் தெரிவித்துள்ளார்.