மும்பை: இந்திய அணியின் இளம் நட்சத்திர ஆல்ரவுண்டர் நிதீஷ் குமார் ரெட்டியை முழுமையான பேட்ஸ்மேனாக மட்டுமே விளையாட வைப்பது கொஞ்சம் ரிஸ்க் என்று முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார். நிதீஷ் குமார் ரெட்டி திறமையான வீரராக இருந்தாலும், இந்திய அணியின் பேலன்ஸையும் கம்பீர் மற்றும் ரோஹித் சர்மா மனதில் வைக்க வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 2 டெஸ்ட் போட்டிகள் முடிவடைந்துள்ள நிலையில், இரு அணிகளும் தலா ஒரு வெற்றியுடன் களத்தில் உள்ளன. இதனால் காபா மைதானத்தில் நடக்கவுள்ள 3வது டெஸ்ட் போட்டி மீதான எதிர்பார்ப்பு உச்சத்தில் இருக்கிறது.

2 போட்டிகள் முடிவடைந்தாலும், இந்திய அணியின் பிளேயிங் லெவன் இன்னும் செட்டாகவில்லை என்று பார்க்கப்படுகிறது. கேஎல் ராகுலின் அபார ஆட்டத்தால், கேப்டன் ரோஹித் சர்மாவின் பேட்டிங் வரிசையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதேபோல் நிதீஷ் குமார் ரெட்டியின் ஆட்டம் காரணமாக, இந்திய அணி 4 பவுலர்களுடன் களமிறங்கி வருகிறது.
2 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ள நிதீஷ் குமார் ரெட்டி 163 ரன்களையும், 2 விக்கெட்டுகளையும் விளாசி இருக்கிறார். ஜெய்ஸ்வாலுக்கு பின் இந்திய அணி சார்பாக அதிக ரன்கள் விளாசியவரும் அவர் தான். இந்த நிலையில் நிதீஷ் குமார் ரெட்டியால் இந்திய அணியின் பேலன்ஸில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சஞ்சய் மஞ்ச்ரேக்கர் பேசுகையில், நிதீஷ் குமார் ரெட்டி திறமையான பேட்ஸ்மேன் என்பதில் எந்த மாற்றும் கருத்தும் கிடையாது. தரமான பவுலிங்கை எதிர்த்து விளையாடும் போது அவரின் பேட்டிங்கும் அடுத்த கட்டத்திற்கு முன்னேற்றம் அடைகிறது. ஏனென்றால் முதல்தர கிரிக்கெட்டில் கூட நிதீஷ் குமார் ரெட்டி இவ்வளவு ரன்களை விளாசியதில்லை.
இவரைப் போன்ற திறமையான பேட்ஸ்மேன்களை பார்ப்பதே அரிதான விஷயம் தான். ஆனால் அடுத்த டெஸ்ட் போட்டியில் நிதீஷ் குமார் ரெட்டியை தேர்வு செய்வதற்கு முன் இந்திய அணி நிர்வாகம் கொஞ்சம் சிந்திக்க வேண்டும். ஏனென்றால் இந்திய அணியின் பேலன்ஸில் நிச்சயம் பிரச்சனை இருக்கிறது. இந்திய அணியின் பேட்டிங் பிரச்சனைகளை சமாளிப்பதோடு, பவுலிங்கை வலிமைப்படுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது.
நிதீஷ் குமார் ரெட்டி ஸ்பார்க்கை காட்டிவிட்டார். ஆனால் முழுமையாக பேட்ஸ்மேனாக மட்டும் அவரை விளையாட வைப்பது கொஞ்சம் ரிஸ்க் என்று எச்சரித்துள்ளார். இந்திய அணியின் பேட்டிங் சொதப்பல்கள் காரணமாக, டவுன் தி ஆர்டரில் சிறந்த பங்களிப்பை அளித்து வரும் நிதீஷ் குமார் ரெட்டியை நீக்க சஞ்சய் மஞ்ச்ரேக்கர் வலிறுடுத்துவது ரசிகர்களிடையே விமர்சனத்தை பெற்று வருகிறது.