அடிலெய்ட்: இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஷேனை நீக்க வேண்டும் என்று முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் வலியுறுத்தியுள்ளார். அவரை உள்ளூர் கிரிக்கெட்டை விளையாடி ஃபார்மை நிரூபிக்க அறிவுறுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி நடக்கவுள்ளது. பகலிரவு டெஸ்ட் என்பதால் இரு அணிகளின் வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகின்றனர். இந்திய அணி தரப்பில் 2 நாட்கள் கொண்ட பயிற்சி போட்டியில் பங்கேற்றுள்ளது. அதேபோல் ஆஸ்திரேலியா வீரர்கள் முதல் டெஸ்ட் தோல்விக்கு பின், பல்வேறு மாற்றங்களை செய்து வருகின்றனர்.

நட்சத்திர வேகப்பந்துவீச்சாளரான ஹேசல்வுட் காயம் காரணமாக விலகிய நிலையில், அவரின் இடத்தில் போலண்ட் கொண்டு வரப்பட்டிருக்கிறார். இருந்தாலும் ஆஸ்திரேலியா அணியின் பேட்டிங் தான் அந்த அணிக்கு சிக்கலாக அமைந்துள்ளது. ஏனென்றால் கவாஜா மற்றும் டிராவிஸ் ஹெட் இருவரும் மட்டுமே நல்ல ஃபார்மில் இருக்கின்றனர்.
நட்சத்திர வீரர்களான மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரும் நீண்ட நாட்களாக ஃபார்முக்கு வருவதற்கு போராடி வருகின்றனர். அதிலும் லபுஷேன் 2 ஆண்டுகளுக்கும் மேலாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். கடைசி 19 டெஸ்ட் போட்டிகளில் லபுஷேனின் பேட்டிங் சராசரி 31.75ஆக மட்டுமே இருக்கிறது. நம்பர் 3ல் களமிறங்கும் பேட்ஸ்மேன் ஃபார்மில் இல்லையென்றால், மிகப்பெரிய பின்னடைவாக அமையும்.
இதனால் லபுஷேனை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளது. இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் மிட்சல் ஜான்சன் பேசுகையில், நீண்ட நாட்களாக மோசமான பேட்டிங்கை விளையாடி வரும் லபுஷேனை 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து நீக்க வேண்டும். பெர்த் டெஸ்ட் தோல்விக்காக ஒரு பலிகடாவாக மாற்ற வேண்டும் என்று கூறவில்லை. அவரை ஷெஃபீல்ட் ஷீல்ட் தொடரில் விளையாட வைக்க வேண்டும்.
அப்போது தான் எந்த அழுத்தமும் இல்லாமல் அவரால் ரன்களை குவித்து ஃபார்முக்கு வர முடியும். அது அவருக்கும் நன்மையை கொடுக்கும். ஏனென்றால் பும்ரா மற்றும் சக இந்திய வீரர்களின் அட்டாக்கில் இருந்து தப்பிக்க முயற்சிக்காமல், உள்ளூர் கிரிக்கெட்டில் கவனம் செலுத்தலாம் என்று தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியா கிரிக்கெட்டில் பலரின் குரல் லபுஷேனுக்கு எதிராக திரும்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.