அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரர்களான ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் இருவரும் மோசமான ஃபார்மில் இருந்து வரும் நிலையில், அவர்களுக்கு முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் அட்வைஸ் கொடுத்துள்ளார்.
இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை சந்தித்தது. பெர்த் மைதானத்தில் வைத்து இந்திய அணி வீரர்களுக்கு பயத்தை காட்ட வேண்டும் என்று ஆஸ்திரேலியா அணி தயாராகிய நிலையில், இந்திய அணியின் கேப்டன் பும்ரா மற்றும் சக வீரர்களுக்கு இணைந்து ஆஸ்திரேலிய அணிக்கு பயத்தை காட்டிவிட்டனர்.

குறிப்பாக சொந்த மண்ணில் மோசமான ஆட்டத்தை விளையாடி ஃபார்மில் இல்லாமல் இருந்த விராட் கோலி, ஆஸ்திரேலியா மண்ணில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் அடித்து அசத்தியுள்ளார். விராட் கோலி போன்ற ஆதிக்கம் செய்ய விரும்பும் வீரர் ஃபார்முக்கு வந்தது ஆஸ்திரேலியா முன்னாள் வீரர்களையும் அச்சமடைய வைத்துள்ளது.
ஆலன் பார்டரே விராட் கோலியை சதமடிக்க விட்டிருக்க கூடாது என்று கூறியுள்ளார். இன்னொரு பக்கம் ஆஸ்திரேலியா அணியின் ஸ்டீவ் ஸ்மித் மற்றும் மார்னஸ் லபுஷேன் இருவரும் மோசமான ஃபார்மை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்திய அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஸ்டீவ் ஸ்மித் 0 மற்றும் 17 ரன்களிலும், லபுஷேன் 2 மற்றும் 3 ஆகிய ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
இருவருக்கும் பும்ரா மற்றும் சிராஜ் இருவரும் இணைந்து அச்சத்தை கொடுத்தனர்.இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணி டெஸ்ட் தொடரை கைப்பற்ற வேண்டுமென்றால், இரு பேட்ஸ்மேன்களும் ஃபார்முக்கு கட்டாயம் வர வேண்டும். இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் பேசுகையில், பெர்த் டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா வீரர்களுடன் நேருக்கு நேர் மோதுவதை தவிர்த்த விராட் கோலி, அவரின் பலத்தை அறிந்து கவனம் செலுத்தினார்.
இதன் காரணமாகவே அவரால் சதம் அடிக்க முடிந்தது. விராட் கோலியின் ஸ்டைலை மார்னஸ் லபுஷேன் மற்றும் ஸ்டீவ் ஸ்மித் பின்பற்ற வேண்டும். ஃபார்முக்கு வருவதற்கான பாதையை அவர்கள் விரைவில் கண்டறிந்து, பேட்டிங்கில் ரன்களை சேர்க்க தொடங்க வேண்டும். அதேபோல் பேட்டிங்கின் போது விராட் கோலி ரன்கள் சேர்ப்பதற்கான பந்துகளை ஒருமுறை கூட மிஸ் செய்யவில்லை.
அதனால் எப்படி ரிஸ்க் எடுக்க வேண்டும் என்பதை இருவரும் விரைவாக கண்டறிந்து எதிரணியை பின் இழுக்கும் பணியை மேற்கொள்ள வேண்டும். பும்ரா போன்ற உலகத்தரம் பவுலர் எளிதான பந்துகளை வீசப் போவதில்லை. ஆனால் மோசமான பந்துகள் கிடைக்கும் போது ரன்களை சேர்க்காமல் இருக்க கூடாது. அதனை பயன்படுத்தியே இந்திய அணி மீது அழுத்தம் கொடுக்க முடியும் என்று தெரிவித்துள்ளார்.