அடில்யெட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் களமிறங்க உள்ள இந்திய அணியின் பிளேயிங் லெவனில் 3 மாற்றங்கள் இருக்கும் என்று முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் கணித்துள்ளார். அதேபோல் தமிழக வீரர் வாஷிங்டன் சுந்தரை நீக்கிவிட்டு, ஜடேஜாவை சேர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி டிச.6ஆம் தேதி விளையாடவுள்ளது. அடிலெய்ட் மைதானத்தில் நடக்கவுள்ளதால், இந்திய அணி வீரர்கள் சிறப்பாக தயாராகி வருகின்றனர். ஏனென்றால் கடந்த முறை அடிலெய்ட் மைதானத்தில் விளையாடிய போது, இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தது.

இந்த நிலையில் இந்திய அணியுடன் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவரும் 2வது டெஸ்ட் போட்டிக்காக இணைந்துள்ளனர். சுப்மன் கில் காயம் காரணமாக ஓய்வில் இருந்த நிலையில், நேற்றில் இருந்தே பேட்டிங் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். இதனால் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதுகுறித்து இந்திய ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் பேசுகையில், இந்திய அணியில் 2 மாற்றங்கள் இருக்கும் என்று நினைக்கிறேன். ஏனென்றால் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் தயாராகிவிட்டனர். இதனால் இருவரும் நேரடியாக பிளேயிங் லெவனில் இடம்பெறுவார்கள். ரோஹித் சர்மா வழக்கம் போல் தொடக்க வீரராகவும், சுப்மன் கில் நம்பர் 3 பேட்டிங் வரிசையிலும் விளையாடுவார்கள்.
இதனால் முதல் டெஸ்ட் போட்டியில் தொடக்க வீரராக களமிறங்கி அசத்திய கேஎல் ராகுல் மீண்டும் நம்பர் 6 பேட்டிங் வரிசையில் களமிறங்குவார். அதேபோல் அடிலெய்ட் டெஸ்ட் போட்டியில் வாஷிங்டன் சுந்தரின் இடத்தில் ரவீந்திர ஜடேஜாவை சேர்க்க வேண்டும். ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் வழிவிடும் வகையில் படிக்கல் மற்றும் ஜுரெல் இருவரும் நீக்கப்படுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.
இந்திய முன்னாள் வீரர்கள் பலரும் கேஎல் ராகுலை டாப் 3 பேட்டிங் வரிசையில் களமிறக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். ஆனால் சுனில் கவாஸ்கர் பழைய திட்டத்திற்கு இந்திய அணியை தள்ளி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் பயிற்சியாளர் கவுதம் கம்பீரின் முடிவு எப்படி இருக்கும் என்ற எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.