பெர்த்: ஆஸ்திரேலியா அணியின் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஷேன் கொடுத்த கேட்சை பிடித்த விராட் கோலி, கடைசி நொடியில் தவறவிட்டது இந்திய ரசிகர்களிடையே ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் விராட் கோலி கேட்ச் பிடித்துவிட்டார் என்று எண்ணி, இந்திய வீரர்கள் சில நொடிகள் கொண்டாட்டத்திலேயே ஈடுபட்டனர்.
பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரின் கடந்த சீசனில் புஜாரா எப்படி ஆஸ்திரேலியா பவுலர்களை சோர்வடைய வைத்தாரோ, அதேபோல் இம்முறை இந்திய வேகப்பந்துவீச்சாளர்களை சோர்வடைய வைப்பேன் என்று மார்னஸ் லபுஷேன் கூறி இருந்தார். அதுமட்டுமல்லாமல் பெர்த் மைதானத்தில் 4 போட்டிகளில் விளையாடி 500 ரன்களுக்கு மேல் லபுஷேன் விளாசி இருந்தார்.

இதனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் லபுஷேனின் விக்கெட்டை இந்திய அணி விரைவாக வீழ்த்த வேண்டும் என்று பார்க்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது. இதன்பின் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணிக்கு மெக்ஸ்வீனி - கவாஜா இருவரும் தொடக்கம் கொடுத்தனர்.
இதில் பும்ராவின் வேகத்தில் அறிமுக வீரரான மெக்ஸ்வீனி 10 ரன்களில் பும்ராவின் வேகத்தில் ஆட்டமிழக்க, பின்னர் நட்சத்திர வீரரான மார்னஸ் லபுஷேன் களமிறங்கினார். பும்ரா வீசிய அடுத்த பந்தில் லபுஷேன் டிஃபென்ஸ் விளையாட, தொடர்ந்து அடுத்த பந்திலேயே லபுஷேனை பும்ரா எட்ஜ் எடுத்தார். அது நேராக விராட் கோலியின் கைகளில் சென்று விழ, இந்திய அணி வீரர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆனால் கேட்சை சரியாக பிடித்த விராட் கோலி, அதனை கட்டுப்படுத்த முடியாமல் கடைசி நொடியில் தவறவிட்டார். அப்போது இந்திய வீரர்களின் கொண்டாட்டத்தை தடுத்த நிறுத்திய விராட் கோலி, கேட்சை தவறவிட்டதை ஒப்புக் கொண்டார். ஸ்லிப் திசையில் தரமான ஃபீல்டரான விராட் கோலி எளிதான கேட்சை தவறவிட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
பேட்டிங்கில் தான் விராட் கோலி ஃபார்மில் இல்லையென்றாலும், ஃபீல்டிங்கில் சிறப்பாக செயல்பட்டு வந்தார். தற்போது ஃபீல்டிங்கிலும் முக்கியமான பேட்ஸ்மேனின் கேட்சை கோட்டைவிட்டிருப்பது இந்திய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. இதன்பின் இந்திய அணி பவுலர்களை சோர்வடைய வைக்கும் முயற்சியில் லபுஷேன் ஈடுபட தொடங்கினார். 36 பந்துகளை எதிர்கொண்டுள்ள அவர் ஒரேயொரு ரன்னை மட்டுமே சேர்த்து களத்தில் இருப்பது ரசிகர்களுக்கு பீதியை கொடுத்துள்ளது.