அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டிக்கு தயாராகும் வகையில், வலைப்பயிற்சியின் போது பும்ராவை எதிர்கொண்டு விராட் கோலி தயாராகி வருகிறார். அதிலும் விராட் கோலியின் முக்கியப் பிரச்சனையான 4வது ஸ்டம்ப் லைனில் பும்ரா தொடர்ந்து வீசி பயிற்சி மேற்கொண்டிருப்பது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றுள்ளது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் பும்ரா, கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, நிதீஷ் குமார் ரெட்டி, ஹர்சித் ராணா, முகமது சிராஜ என்று அத்தனை வீரர்களும் சிறப்பான பங்களிப்பை அளித்தனர்.

இந்திய வீரர்கள் அனைவரும் ஃபார்முக்கு திரும்பியுள்ள நிலையில், 2வது போட்டிக்கு முன்பாக கேப்டன் ரோஹித் சர்மா இணைந்திருக்கிறார். இதனால் 2வது போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக ரோஹித் சர்மா களமிறங்குகிறார். ஆனால் இதுவரை ரோஹித் சர்மாவின் பேட்டிங் வரிசை குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. பயிற்சிப் போட்டியில் மிடில் ஆர்டரில் களமிறங்கி சர்ப்ரைஸ் கொடுத்தார்.
இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளின் வீரர்கள் தனித்தனியே பயிற்சி மேற்கொண்டனர். அப்போது இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இருவரும் பேட்டிங் பயிற்சியை தொடங்கி இருக்கின்றனர். துணைப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் முன்னிலையில் ரோஹித் சர்மா தொடர்ந்து பயிற்சி மேற்கொண்டார்.
எந்த பந்தை லீச் செய்ய வேண்டும், எந்த பந்தை டிஃபென்ஸ் ஆட வேண்டும் என்பதை அபிஷேக் நாயருடன் இணைந்து ரோஹித் சர்மா பணியாற்றி கொண்டே இருந்தார். இவர்கள் இருவரும் மும்பையிலும் பயிற்சி மேற்கொண்டிருந்தனர். இதன்பின் ரிஷப் பண்ட் மற்றும் வாஷிங்டன் சுந்தர் உள்ளிட்டோர் அரை மணி நேரத்திற்கும் மேலாக த்ரோ டவுன் பந்துகளை எதிர்கொண்டனர்.
ஆனால் பயிற்சியின் உச்சமாக பும்ராவை எதிர்த்து விராட் கோலி பேட்டிங் செய்த சம்பவம் அரங்கேறியது. விராட் கோலியின் முக்கிய வீகன்ஸான 4வது ஸ்டம்ப் லைனிலேயே தொடர்ச்சியாக பவுலிங் செய்து பும்ரா அவரை சீண்டி கொண்டே இருந்தார். அதேபோல் விராட் கோலி பேக் ஃபூட் மற்றும் ஃபிரண்ட் ஃபூட் என்று மாற்றி மாற்றி ஷாட்களை விளையாடினார்.
பேக் ஃபூட்டில் சென்று பும்ராவை அட்டகாசமாக கவர்ஸில் அடித்த ஷாட் பயிற்சியாளர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. பிங்க் பாலில் விளையாடும் போது சாதாரண வேகப்பந்துவீச்சாளர்களின் கைகளில் இருந்து வெளியாகும் பந்துகளையே சரியாக கணிக்க முடியாது. ஆனால் பும்ராவின் கைகளில் இருந்து வரும் பந்துகளை கணித்து விராட் கோலி நம்பிக்கையுடன் விளையாடி இருக்கிறார்.
இதனால் 2வது டெஸ்ட் போட்டியிலும் விராட் கோலி அபார ஃபார்மை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை விராட் கோலி விளையாடியுள்ள 4 பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 277 ரன்களை விளாசி இருக்கிறார். அதேபோல் அடிலெய்ட் மைதானமத்தில் மட்டும் விராட் கோலி 5 சதங்களை விளாசி இருப்பது குறிப்பிடத்தக்கது.