அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியிலேயே இந்திய அணியின் விராட் கோலியை சதம் அடிக்கவிட்டது மிகப்பெரிய சிக்கலை உருவாக்கியுள்ளதாக முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் தெரிவித்துள்ளார். நீண்ட காலமாக சிறந்த பேட்ஸ்மேனாக இருந்த அவருக்கு, தேவையான கான்ஃபிடன்ஸை அந்த சதம் கொடுத்திருக்கும் என்று கூறியுள்ளார்.
இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி கடந்த ஓராண்டுக்கும் மேலாக சதம் விளாச முடியாமல் தவித்து வந்தார். அதேபோல் சொந்த மண்ணில் ஸ்பின்னர்களிடம் எளிதாக விக்கெட்டை கொடுத்த வந்த விராட் கோலி, விரைவில் ஓய்வை அறிவிப்பார் என்ற குரல்கள் எழுந்தன. நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் கூட விராட் கோலி வெறும் 93 ரன்களை தான் சேர்த்திருந்தார்.

இந்த நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஃபார்முக்கு வருவாரா என்ற கேள்விகள் எழுந்தன. அதேபோல் விராட் கோலியை ஆஸ்திரேலிய வீரர்கள் சீண்ட வேண்டாம் என்றும் முன்னாள் வீரர்கள் பலரும் அறிவுறுத்தி வந்தனர். ஆனால் விராட் கோலி பெர்த் மைதானத்திலேயே தனது சதத்தை விளாசி ஃபார்முக்கு திரும்பியுள்ளார்.
அதுமட்டுமல்லாமல் ஃபீல்டிங்கின் போது பும்ராவுக்கு உதவியாக கேப்டன்சியை மேற்கொண்டதோடு, மிகவும் ஆக்ரோஷமாக செயல்பட்டார். இதனால் பழைய பீஸ்ட் விராட் கோலி கம்பேக் கொடுத்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் மைக்கில் கிளார்க் பேசுகையில், இதனை விடவும் சிறந்த 2வது இன்னிங்ஸ் ஆட்டத்தை விராட் கோலியிடம் இருந்து எதிர்பார்க்க முடியாது.
அந்த அவ்வளவிற்கு சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். இந்திய அணி ஆதிக்கம் செலுத்தியதால், விராட் கோலி மீது எந்த அழுத்தமும் இல்லை. அப்போது பேட்டிங் ஆட வந்து, பழைய விராட் கோலி எப்படி ஆடுவாரோ அப்படியொரு ஆட்டத்தை ஆடிவிட்டார். அண்மை காலங்களில் பெரிய ஸ்கோரை அடிக்காததால், அவர் மீது அழுத்தம் இருந்தது. ஆனால் இப்போது சதம் விளாசியதன் மூலம் மீண்டும் மன உறுதியை உச்சத்திற்கு கொண்டு சென்றுவிட்டார்.
அந்த சதத்தை விளாசிய பின், அனைவரும் அமர்ந்து விராட் கோலி இஸ் பேக் என்று சொன்னார்கள். இந்த டெஸ்ட் தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே ஆஸ்திரேலியா அணியை எச்சரித்திருந்தேன். முதல் போட்டியில் இந்திய அணியை வெற்றிபெறவிட்டால், சிக்கல் அதிகமாக இருக்கும் என்றேன். அவர்களை முதலிலேயே அடித்துவிட்டால், அடுத்தடுத்த போட்டிகளில் ஈடுபட்ட முயற்சிப்பார்கள். 3 அல்லது 4வது டெஸ்டில் இந்திய வீரர்கள் சதமடித்திருந்தால் பிரச்சனையில்லை.
ஆனால் முதல் டெஸ்டிலேயே சதம் விளாசியுள்ளார்கள். அதுமட்டுமல்லாமல் விராட் கோலி போன்ற வீரரின் மன உறுதி உச்சத்தில் இருக்கும் போது, ஆஸ்திரேலியா அணியின் பணிகள் அதிகரித்துள்ளது. விராட் கோலியை முதல் போட்டியில் சதமடிக்க விட்டது, மிகப்பெரிய பிரச்சனைகளை உருவாக்கும். ஏனென்றால் அவர் நீண்ட காலமாக சிறந்த பேட்ஸ்மேனாக இருந்தவர் என்று தெரிவித்துள்ளார்.