பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி பந்துகளில் சதம் விளாசி சாதனை படைத்துள்ளார். இந்திய மண்ணில் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த விராட் கோலி, ஆஸ்திரேலியாவில் களமிறங்கிய முதல் போட்டியிலேயே சதம் விளாசி கம்பேக் கொடுத்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் இந்திய அணியின் நட்சத்திர வீரரான விராட் கோலி 5 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார். ஏற்கனவே நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி 6 இன்னிங்ஸ்களில் 93 ரன்களை மட்டுமே சேர்த்திருந்தார்.

இதனால் 36 வயதாகும் விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி ஃபார்மை நிரூபிக்க வேண்டிய தேவை ஏற்பட்டது. ஒருவேளை ஆஸ்திரேலியாவிலும் விராட் கோலி ஃபார்மை நிரூபிக்க தவறினால், இங்கிலாந்து டெஸ்ட் தொடருடன் அவர் இந்திய அணியில் இருந்து நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியது.
இந்த நிலையில் பெர்த் டெஸ்டின் முதல் இன்னிங்ஸிலும் சொதப்ப, அடுத்த போட்டியில் விராட் கோலியை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்தன. தற்போது 2வது இன்னிங்ஸில் விராட் கோலி தன் மீதான அனைத்து விமர்சனங்களுக்கும் பதிலடி கொடுத்துள்ளார். விராட் கோலி களமிறங்கிய பின் அடுத்தடுத்து ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட் மற்றும் துருவ் ஜுரெல் ஆகிய மூவரும் விக்கெட்டை பறிகொடுத்தனர்.
இந்திய அணி நல்ல முன்னிலை பெற்றாலும், 3வது நாள் முழுக்க பேட்டிங் செய்ய வேண்டும் என்பதே இந்திய அணியின் திட்டமாக இருந்தது. அதற்கான முழு பொறுப்பையும் விராட் கோலி கையில் எடுத்து கொண்டார். வேகப்பந்துவீச்சாளர்கள், ஸ்பின்னர்கள் என்று இரு தரப்பையும் மிகவும் சாதாரணமாக விராட் கோலி கையாண்டு ரன்களை குவித்தார்.
சிறப்பாக ஆடிய விராட் கோலி 94 பந்துகளில் தனது அரைசதத்தை விளாசி அசத்தினார். இதனைத் தொடர்ந்து வாஷிங்டன் சுந்தருடன் இணைந்து விரைவாக ரன்களை சேர்த்த நிலையில், அவர் 21 ரன்களில் ஆட்டமிழக்க, நிதீஷ் குமார் ரெட்டி களம் புகுந்தார். அவர் களமிறங்கியதில் இருந்தே சிக்சரும் பவுண்டரியுமாய் பறக்க, விராட் கோலியும் கியரை மாற்றி அதிரடிக்கு திரும்பினார்.
நேதன் லயன் பந்தில் சிக்சரை பறக்கவிட்ட விராட் கோலி, லபுஷேன் பந்தில் அடுத்தடுத்து பவுண்டரிகளை விளாசி தள்ளினார். இதனால் இந்திய அணியின் முன்னிலை 500 ரன்களை கடந்து சென்றது. அதேபோல் விராட் கோலி 90 ரன்களை கடந்து களத்தில் நிற்க, அவர் சதமடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டது. இன்னொரு பக்கம் இந்திய அணியும் டிக்ளேர் செய்யும் திட்டத்திற்கு இறங்கி வந்தது.
தொடர்ந்து லபுஷேன் பவுலிங்கில் பவுண்டரியை விளாசிய விராட் கோலி, 143 பந்துகளில் தனது சதத்தை எட்டி சாதனை படைத்தார். அந்த பந்து பவுண்டரிக்கு சென்றதை அறிய சில நிமிடங்கள் காத்திருந்த விராட் கோலி, பின்னர் மகிழ்ச்சியை தனது பேட்டிற்கு முத்தம் கொடுத்து வெளிப்படுத்தினார். இதன்பின் இந்திய அணி 486 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்த நிலையில் டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
இதனால் ஆஸ்திரேலியா அணிக்கு 534 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டது. சர்வதேச கிரிக்கெட்டில் விராட் கோலியின் 80வது சதம் இதுவாகும். கடைசியாக வெஸ்ட் இண்டீஸ் மண்ணில் கடந்த ஆண்டு சதம் விளாசிய விராட் கோலி, அதன்பின் டெஸ்ட் கிரிக்கெட்டில் இப்போது தான் சதம் அடித்துள்ளார். இதன் மூலமாக ஆஸ்திரேலியா மண்ணில் விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.