பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது விராட் கோலி 55 ரன்கள் எடுத்த போது இந்திய அணியின் கேப்டன் பும்ராவிடம் டிக்ளேர் செய்யும் திட்டங்கள் குறித்து கேட்டறிந்தது தெரிய வந்துள்ளது.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றது. இந்தப் போட்டியில் 295 ரன்கள் வித்தியாசத்தில் வென்றதன் மூலமாக, SENA நாடுகளில் இந்திய அணியின் மிகப்பெரிய வெற்றியாக அமைந்துள்ளது. அதேபோல் ரோஹித் சர்மா, சுப்மன் கில், முகமது ஷமி, அஸ்வின், ஜடேஜா உள்ளிட்டோர் இல்லாமலேயே இந்திய அணி வென்றுள்ளது.

இதற்கு பும்ரா, கேஎல் ராகுல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரிஷப் பண்ட், நிதீஷ் குமார் ரெட்டி மற்றும் விராட் கோலி உள்ளிட்டோர் முக்கிய காரணமாக அமைந்தனர். சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு பின் விராட் கோலி டெஸ்ட் கிரிக்கெட்டில் சதம் விளாசி ஃபார்முக்கு வந்துள்ளார். 2வது இன்னிங்ஸில் இந்திய அணி 500 ரன்கள் முன்னிலையை நெருங்கிய போதும், விராட் கோலி சதமடிப்பதற்காக கேப்டன் பும்ரா காத்திருந்தார்.
இதனிடையே விராட் கோலி அரைசதம் கடந்த பின்னரே இந்திய அணியின் ஓய்வறைக்கு மெசேஜ் ஒன்றை அனுப்பியது தெரிய வந்துள்ளது. இதுகுறித்து ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் இந்திய வீரர் புஜாராவுடன் பத்திரிகையாளர் ஜஸ்டின் சப்ரு பேசுகையில், 3வது நாள் ஆட்டத்திற்கு பின் விராட் கோலியுடன் பேசும் வாய்ப்பு கிடைத்தது.
அப்போது விராட் கோலி பேசும் போது, அரைசதம் கடந்த பின்னரே ஓய்வறைக்கு டிக்ளேர் செய்வது தொடர்பான திட்டங்கள் குறித்து மெசேஜ் அனுப்பினேன். 55 ரன்கள் எடுத்திருந்த போது ஓய்வறையில் எடுக்கப்பட்டுள்ள முடிவுகள் என்ன என்று கேள்வி எழுப்பினேன். அப்போது இன்னும் 22 ஓவர்கள் பேட்டிங் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டது.
அதன்பின் என்னுடைய ஷாட்ஸிற்கு போகலாம் என்று புரிந்து கொண்டேன். அதேபோல் 3வது நாள் முடிவில் இந்திய அணி பவுலர்களுக்கு சில ஓவர்களை வீசும் வாய்ப்பு கிடைக்க வேண்டும் என்பதையும் அறிந்து வைத்திருந்தேன். இந்திய அணியின் வெற்றிக்கு உதவுவதே நோக்கம் என்று தெரிவித்துள்ளார். தொடர்ந்து புஜாரா பேசுகையில், விராட் கோலிக்கு என்ன செய்ய வேண்டும் என்பது நன்றாக தெரியும்.
அதேபோல் விராட் கோலி ஒருபோதும் சதம் அடிக்க வேண்டும் என்று திட்டமிட்டு பேட்டிங் செய்ததில்லை என்று பாராட்டியுள்ளார். இந்த சதம் மூலமாக விராட் கோலி ஆஸ்திரேலியா மண்ணில் தான் யார் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். பார்டர் கவாஸ்கர் டிராபியின் முதல் போட்டியிலேயே விராட் கோலி ஃபார்முக்கு வந்திருப்பதால், இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி வெல்லும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.