அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் வாஷிங்டன் சுந்தர் களமிறங்கவே 90 சதவிகிதம் வரை வாய்ப்புகள் இருப்பதாக தெரிய வந்துள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டியிலும் வாஷிங்டன் சுந்தரையே இந்திய அணி தேர்வு செய்யவுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பெர்த் மைதானத்தில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை 295 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றியை பெற்றது. இதனைத் தொடர்ந்து அடிலெய்ட் மைதானத்தில் நாளை மறுநாள் தொடங்கவுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடவுள்ளது. இதுவரை ஆஸ்திரேலியா மண்ணில் நடந்த ஒரேயொரு பகலிரவு டெஸ்டில் தான் அந்த அணி தோல்வியை சந்தித்துள்ளது.

கடந்த முறை வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது ஷமார் ஜோசப்பின் அபார பவுலிங்கால் ஆஸ்திரேலியா அணியை பகலிரவு டெஸ்ட் போட்டியில் வீழ்த்தியது. இதனால் பகலிரவு டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியா அணியை வீழ்த்த முடியும் என்ற நம்பிக்கையில் இந்திய அணி களமிறங்கவுள்ளது. இதற்கு முன் அடிலெய்ட் மைதானத்தில் நடந்த டெஸ்டில் இந்திய அணி 36 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி இருக்கிறது.
இதனால் இந்திய வீரர்கள் பலரும் எச்சரிக்கையுடன் தயாராகி வருகின்றனர். இதனிடையே முதல் டெஸ்ட் போட்டியில் களமிறங்கிய இந்திய பிளேயிங் லெவனுக்கும், 2வது போட்டிக்கான பிளேயிங் லெவனுக்கும் சில மாற்றங்கள் செய்யப்படலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது. குறிப்பாக முதல் டெஸ்ட் போட்டியில் விளையாடிய வாஷிங்டன் சுந்தருக்கு பதிலாக அஸ்வினை கொண்டு வர அதிக வாய்ப்புகள் இருப்பதாக பார்க்கப்பட்டது.
ஏனென்றால் அடிலெய்ட் மைதானத்தில் அஸ்வின் விளையாடிய 2 டெஸ்ட் போட்டிகளில் மட்டும் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். அதேபோல் வாஷிங்டன் சுந்தருக்கு பிங்க் பாலில் பவுலிங் செய்த அனுபவம் இல்லை. இதனாக் ரோஹித் சர்மா - கம்பீர் இருவரும் அஸ்வினை கொண்டு வருவார்கள் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் வாஷிங்டன் சுந்தரே 2வது டெஸ்டிலும் களமிறங்குவார் என்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியதோடு, பேட்டிங்கில் 33 ரன்களை விளாசி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் அவரின் மன உறுதியை குலைக்க வேண்டாம் என்ற நோக்கில் வாஷிங்டன் சுந்தருடன் களமிறங்க இந்திய அணி முடிவு எடுத்திருக்கிறது. அதற்கேற்ப பிங்க் பால் பயிற்சி ஆட்டத்தில் வாஷிங்டன் சுந்தரும் 42* ரன்கள் மற்றும் ஒரு விக்கெட்டை வீழ்த்தி இருக்கிறார்.
இதனால் அடுத்த டெஸ்ட் போட்டியிலும் அஸ்வின் மற்றும் ஜடேஜா இருவருக்கும் வாய்ப்பு கிடைக்காது என்று பார்க்கப்படுகிறது. இருவருக்கும் இதுவே கடைசி ஆஸ்திரேலியா சுற்றுப்பயணமாக அமைந்துள்ள நிலையில், இந்த தொடரிலும் வாய்ப்பு கிடைக்காமல் பெஞ்ச் செய்யப்பட்டிருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.