பெர்த்: இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ராவின் பவுலிங்கை பார்க்கும் போது மால்கம் மார்ஷலின் பவுலிங் நினைவுக்கு வருவதாக பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பாராட்டியுள்ளார். பவுலர்கள் தங்களின் ரிதத்தை பிடிக்க சில பந்துகள் பிடிக்கும் என்று கூறிய அவர், பும்ரா தனது முதல் பந்தில் இருந்தே நல்ல ரிதத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் டாஸ் வென்று முதல் பேட்டிங் ஆடிய இந்திய அணி வெறும் 150 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட்டாகியது. இதனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் தோல்வி உறுதி என்று இந்திய அணி ரசிகர்கள் பலரும் நம்பிக்கை இழந்தனர்.

ஆனால் ஆஸ்திரேலியா அணியின் பேட்ஸ்மேன்களை தனது முதல் ஸ்பெல்லிலேயே இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா வீழ்த்தி அசத்தினார். 38 ரன்களுக்கே 5 விக்கெட்டுகளை ஆஸ்திரேலியா அணி இழந்த நிலையில், முதல் நாள் ஆட்டம் நேரம் முடிவில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகள் இழப்பிற்கு 67 ரன்களை எடுத்துள்ளது.
இந்திய அணியின் கேப்டன் ஜஸ்பிரிட் பும்ரா 10 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். அதிலும் ஆஸ்திரேலியா அணியின் முக்கிய வீரர்களான உஸ்மான் கவாஜா மற்றும் ஸ்டீவ் ஸ்மித் இருவரையும் அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி இருப்பது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் பேசுகையில், டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு சில பவுலர்களை மட்டுமே தங்களின் முதல் ஸ்பெல்லில் இருந்தே மிகச்சிறந்த ரிதமில் பவுலிங் செய்து பார்த்துள்ளேன். அவர்கள் பவுலிங் செய்ய வரும் போது, சிறப்பாக தயாராகி வந்திருப்பார்கள். ஏனென்றால் மற்ற பவுலர்கள் தங்களின் ரிதத்தை பிடிப்பதற்கு குறைந்தபட்சம் 3 முதல் 4 பந்துகளையாவது எடுத்து கொள்வார்கள்.
அதனை பேட்ஸ்மேன்கள் சில பவுண்டரிகளை விளாசி அழுத்தத்தில் இருந்து தப்பிக்க பயன்படுத்தி கொள்வார்கள். ஆனால் பும்ரா இந்த விஷயத்தில் மறைந்த வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷலை போல் இருக்கிறார். எந்த நேரத்தில் பவுலிங் செய்ய வந்தாலும் நல்ல ரிதத்தில் இருகிறார். மால்கன் மார்ஷல் ஒரு முறை கூட தனது முதல் ஸ்பெல்லில் எதிரணி பேட்ஸ்மேன்களை ரன்கள் எடுக்க விட்டதில்லை.
தற்போது பும்ரா அப்படி தான் செயல்படுகிறார் என்று தெரிவித்துள்ளார். இந்திய வீரர் பும்ராவை வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் மால்கம் மார்ஷலோடு ஒப்பிட்டு பாராட்டி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் ஆண்டி ராபர்ட்ஸ் ஒருமுறை பும்ராவை தங்களின் காலத்தில் விளையாடி இருக்க வேண்டிய பவுலர் என்று பாராட்டி இருந்தார்.
ஆண்டி ராபர்ட்ஸ், மைக்கில் ஹோல்டிங், கோலின் கிராஃப்ட், ஜோயல் கார்னர், கர்ட்லி அம்ப்ரூஸ் உள்ளிட்டோர் அடங்கிய பவுலிங் லைன் அப்பில் பும்ராவை இருக்க வேண்டும் என்று ஆண்டி ராபர்ட்ஸ் பேசியது தான் பும்ராவுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாக பார்க்கப்பட்டு வருகிறது. அதற்கேற்ப பும்ரா பவுலிங் ஒற்றை ஆளாக அசத்தி வருவது இந்திய அணி ரசிகர்களுக்கும் மகிழ்ச்சியை அளித்துள்ளது.