அடிலெய்ட்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டி பகிலிரவு ஆட்டமாக நடக்கவுள்ள நிலையில், இதுவரை இந்திய அணி விளையாடியுள்ள பகலிரவு டெஸ்ட் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலியின் செயல்பாடுகள் எப்படி இருக்கிறது என்பதை பார்க்கலாம்.
பிசிசிஐ தரப்பில் கடந்த சில ஆண்டுகளாகவே பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்துவதில் பெரிய ஆர்வம் காட்டவில்லை. பிசிசிஐ செயலாளராக இருந்த ஜெய் ஷாவே, பிங்க் பால் டெஸ்டை தீவிரமாக அணுக முடியாது என்று நேரடியாக கூறி இருந்தார். இதனால் இந்திய வீரர்கள் அதிகளவில் பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய அனுபவம் இல்லை.

இந்த நிலையில் அடிலெய்ட் மைதானத்தில் நாளை மறுநாள் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி பங்கேற்க உள்ளது. பகலிரவு டெஸ்ட் போட்டி என்பதால், இந்திய அணி வீரர்கள் பிங்க் பாலில் பேட்டிங் மற்றும் பவுலிங் பயிற்சியை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த முறை அடிலெய்டில் பிங்க் பால் டெஸ்டில் இந்திய அணி விளையாடிய போது, 36 ரன்களுக்கு ஆல் அவுட்டான வரலாறு அரங்கேறியது.
இதனால் மீண்டும் அப்படியொரு சம்பவம் நடந்துவிடக் கூடாது என்று இந்திய ரசிகர்கள் அச்சத்தில் உள்ளனர். இந்த நிலையில் இந்திய அணி விளையாடிய பிங்க் பால் டெஸ்ட் போட்டிகளின் வரலாற்றையும், அதில் விராட் கோலி செய்துள்ள பங்களிப்பையும் ரசிகர்கள் பார்த்து வருகின்றனர். அதில் இந்திய அணி இதுவரை 4 பகலிரவு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்றுள்ளது.
முதல்முறையாக 2019ஆம் ஆண்டு கொல்கத்தா மைதானத்தில் வங்கதேசத்திற்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றியை பெற்றது. அந்தப் போட்டியில் நட்சத்திர வீரர் விராட் கோலி 136 ரன்களை விளாசினார். இதனைத் தொடர்ந்து இந்திய அணி 2வது முறையாக அடிலெய்ட் மைதானத்தில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் களமிறங்கியது.
இந்தப் போட்டியில் இந்திய அணி மோசமான தோல்வியை அடைந்தாலும், விராட் கோலி சிறப்பாக விளையாடி 74 ரன்களை விளாசினார். ரஹானேவின் மோசமான தவறால், 74 ரன்களில் ரன் அவுட்டாகி வெளியேறினார். இதன்பின் அகமதாபாத் மைதானத்தில் இங்கிலாந்து அணிக்கு எதிராக பகலிரவு டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடியது.
இதில் இந்திய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றியை பெற்றாலும், விராட் கோலி 27 ரன்களை மட்டுமே சேர்த்தார். தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிராக நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் விராட் கோலி 23 மற்றும் 13 ஆகிய ரன்களை எடுத்து வெளியேறினார். இதன் மூலமாக இந்திய அணி விளையாடியுள்ள 4 பகலிரவு டெஸ்ட் போட்டியில் 3ல் வென்றுள்ளது.
அதேபோல் விராட் கோலி 4 போட்டிகளில் ஒரு சதம், ஒரு அரைசதம் உட்பட 277 ரன்களை விளாசி இருக்கிறார். பெர்த் மைதானத்தில் நடந்த டெஸ்ட் போட்டியின் மூலமாகவே விராட் கோலி ஃபார்முக்கு வந்துவிட்ட நிலையில், பிங்க் பால் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அவரை நம்பியே களமிறங்குகிறது. ஏனென்றால் ஜெய்ஸ்வால் உள்ளிட்ட வீரர்களுக்கு பகலிரவு டெஸ்ட் போட்டியில் விளையாடிய அனுபவம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.