பெர்த்: ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் இளம் வீரரான துருவ் ஜுரெல் இரு இன்னிங்ஸ்களிலும் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் துருவ் ஜுரெல் நீக்கப்பட வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. 3வது நாள் ஆட்டத்தை இந்திய அணி 172 ரன்களுடன் தொடங்கிய நிலையில், சிறப்பாக விளையாடிய கேஎல் ராகுல் 77 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். தொடர்ந்து வந்த படிக்கல் உணவு இடைவேளைக்கு பின் வீசப்பட்ட முதல் பந்திலேயே 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இதன்பின் விராட் கோலி - ஜெய்ஸ்வால் கூட்டணி இணைந்து விரைவாக ரன்கள் சேர்த்தது. அதேபோல் பிட்ச் உடைய தொடங்கிய நிலையில், கொஞ்சம் பவுன்ஸ் கணிக்க முடியாத அளவிற்கு மாறியது. அப்போது சிறப்பாக ஆடி கொண்டிருந்த ஜெய்ஸ்வால் 297 பந்துகளில் 3 சிக்ஸ், 15 பவுண்டரி உட்பட 161 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்து வெளியேறினார்.
அப்போது உடனடியாக வந்த ரிஷப் பண்ட் 1 ரன்னில் ஆட்டமிழக்க, இந்திய அணி 320 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்தது. பின்னர் நம்பிக்கை நட்சத்திரமான துருவ் ஜுரெல் களம் புகுந்தார். அவர் விராட் கோலிக்கு சிறந்த கம்பெனியை கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட போது, கம்மின்ஸ் வீசிய பந்தில் பவுன்ஸ் இருக்கும் என்பதை தவறாக கணித்து 1 ரன்னில் ஆட்டமிழந்தார்.
ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிராக 88 ரன்கள் மற்றும் 60 ரன்கள் குவித்து துருவ் ஜுரெல் மிகச்சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். ஆனால் பெர்த் டெஸ்ட் போட்டியில் 11 மற்றும் 1 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்துள்ளார். இதனால் 2வது டெஸ்ட் போட்டியில் இருந்து துருவ் ஜுரெல் நீக்கப்பட அதிக வாய்ப்புகள் ஏற்பட்டுள்ளது.
ஏற்கனவே இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா ஆஸ்திரேலியாவில் தரையிறங்கிவிட்டதால், அவர் அடுத்த போட்டியில் விளையாடுவது உறுதியாகியுள்ளது. அதேபோல் காயம் காரணமாக முதல் டெஸ்ட் போட்டியை தவறவிட்டுள்ள சுப்மன் கில், 2வது டெஸ்ட் போட்டிக்குள் தயாராகிவிடுவார் என்று பார்க்கப்படுகிறது.
இதனால் ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இருவருக்கும் வழிவிடும் வகையில் தேவ்தத் படிக்கல் மற்றும் துருவ் ஜுரெல் இருவரும் பெஞ்ச் செய்யப்பட வாய்ப்பை உருவாக்கி கொடுத்துள்ளனர். குறிப்பாக இந்திய மண்ணில் சிறப்பாக ஆடிய ஜுரெல் ஆஸ்திரேலியா மண்ணில் ஏமாற்றம் அளித்திருப்பது ரசிகர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.