சிட்னி: இந்திய அணியின் 22 வயது இளம் வீரரான யஷஸ்வி ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 சதங்களுக்கு மேல் விளாசுவார் என்று ஆஸ்திரேலியா அணி வீரர் கிளென் மேக்ஸ்வெல் கணிப்பை வெளியிட்டுள்ளார். அதேபோல் சமகால கிரிக்கெட்டில் பும்ரா நம்பர் 1 பவுலராக இருந்து வருவதாகவும் பாராட்டியுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான பெர்த் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அடைந்துள்ள வெற்றி பலருக்கும் வியப்பை கொடுத்துள்ளது. குறிப்பாக ஆஸ்திரேலியா வீரர்களை மனதளவில் பாதிப்படைய வைத்து இந்திய அணி பவுலர்களும், பேட்ஸ்மேன்களும் அசாத்திய வெற்றியை பெற்றுள்ளனர். அதிலும் யஷஸ்வி ஜெய்ஸ்வால் ஆஸ்திரேலியா மண்ணில் விளையாடிய முதல் டெஸ்ட் போட்டியிலேயே சதம் அடித்துள்ளார்.

மொத்தமாக 297 பந்துகளை எதிர்கொண்டு 161 ரன்களை ஜெய்ஸ்வால் விளாசினார். அதேபோல் 15 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள ஜெய்ஸ்வால் இதுவரை 4 சதங்கள், 8 அரைசதம் உட்பட 1,568 ரன்களை விளாசி இருக்கிறார். 22 வயதிலேயே டெஸ்ட் கிரிக்கெட்டில் ஜொலித்து வரும் ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை ஆஸ்திரேலியா ரசிகர்களும் பாராட்டியுள்ளனர்.
ஆஸ்திரேலியா மீடியாக்களில் ஜெய்ஸ்வாலை "நியூ கிங்" என்று கொண்டாடி வருகின்றனர். இதுகுறித்து ஆஸ்திரேலியா அணியின் கிளென் மேக்ஸ்வெல் பேசுகையில், இந்திய அணியின் ஜெய்ஸ்வாலுக்கு வீக்னஸ் இருப்பது போல் தெரியவில்லை. ஷார்ட் பால்களை மிகச்சிறப்பாக எதிர்கொள்கிறார். இன்னொரு ட்ரைவ்-களை அட்டகாசமாக ஆடுகிறார்.
ஸ்பின்னர்களை வெளுத்து கட்டுகிறார். அழுத்தமான நேரங்களில் விக்கெட்டை காப்பாற்றி, நீண்ட நேரம் பேட்டிங் செய்கிறார். என்னை பொறுத்தவரை ஜெய்ஸ்வால் டெஸ்ட் கிரிக்கெட்டில் 40 சதங்களுக்கும் மேல் விளாசுவார் என்று நினைக்கிறேன். எதிர்காலத்தில் வரலாற்றையே மாற்றக் கூடிய பேட்ஸ்மேனாக ஜெய்ஸ்வால் இருப்பார் என்று கணித்துள்ளார்.
இதன்பின் தொடர்ந்து பும்ரா குறித்து பேசுகையில், கிரிக்கெட் வரலாற்றில் மிகச்சிறந்த பவுலர்களில் ஒருவராக ஜஸ்பிரிட் பும்ரா மாறி வருகிறார். வரும் காலங்களில் பும்ராவால் அதிக விக்கெட்டுகளை வீழ்த்த முடியவில்லை என்றாலும், அவர் ஆல் டைம் சிறந்த பவுலர்களில் ஒருவராக இருப்பார். ஏனென்றால் அவருக்கு எதிராக விளையாடுவது மிகவும் கடினமான விஷயம்.
பும்ராவின் பவுலிங் ஆக்ஷன் மிகவும் தனித்துவமானது. பவுன்சர் மற்றும் லெந்த் பால் இரண்டிற்கும் பும்ராவின் ரிலீஸ் பாய்ண்ட் ஒரே இடத்தில் தான் இருக்கிறது. அதனால் அவர் என்ன பந்தை வீசப் போகிறார் என்பதை கணிப்பது கடினமான விஷயம். சில நேரங்களில் பந்து நம்மை நோக்கி வரும் போது, கடைசி நொடியில் வெளியில் சென்றுவிடுகிறது. அப்படியான பந்துகளை எதிர்கொள்வது சாதாரணமானது அல்ல என்று தெரிவித்துள்ளார்.