கோலிக்கு என்ன சிக்கல்?
இப்படி ஒரு இக்கட்டான சூழலில் உள்ள இந்திய அணியின் கேப்டன் கோலிக்கு மேலும் ஒரு சிக்கல் உள்ளது. அது ரோஹித் சர்மா மூலம் வந்துள்ள சிக்கல். ரோஹித் என்ன செய்தார்? கோலி ஓய்வு எடுக்கும் போது எல்லாம் ரோஹித் தான் கேப்டன் பதவியை ஏற்கிறார்.
ரோஹித்துக்கு கிடைத்த பாராட்டு
இப்போது அதுவே கோலிக்கு சிக்கலாக மாறியுள்ளது. காரணம், ரோஹித் இதுவரை தான் கேப்டனாக பொறுப்பேற்ற அனைத்து தொடர்களையும் வெற்றி பெற்று கொடுத்து இருக்கிறார். ரோஹித் சர்மா பலம் குறைந்த அணிகளோடு மோதி வெற்றி பெற்றுக் கொடுத்தார் என சிலர் கூறலாம். ஆனால், கேப்டன் என்ற பொறுப்பில் ரோஹித் உடைய செயல்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டது.
கோலி - ரோஹித் ஒப்பீடு
ரோஹித் எந்த சூழ்நிலையிலும், அசராமல் இருந்து முடிவுகளை எடுத்தார். பலரும் ரோஹித், தோனியின் வழியை கேப்டன் பொறுப்பில் பின்பற்றுகிறார் எனவும் கூறினார்கள். அதே சமயம், கோலியின் தலைமை அத்தனை சிறப்பு வாய்ந்ததாக இல்லை. அணித்தேர்வு, பந்துவீச்சாளர்களை பயன்படுத்தும் விதம், திட்டங்களை சூழலுக்கு ஏற்றவாறு மாற்றுவது என எந்த விஷயத்திலும் கோலி சிறப்பாக செயல்படவில்லை.
டி20 தொடரில் இந்தியா சொதப்பல்
தற்போது ஆஸ்திரேலியா தொடரில் கூட இந்தியா தான் வெல்லும் என ஷேன் வார்னே உள்ளிட்ட முன்னாள் ஆஸ்திரேலிய வீரர்கள் கருத்து கூறினர். அந்தளவிற்கு ஆஸ்திரேலிய அணி பலவீனமாக இருக்கிறது. ஆனால், இந்தியா முதல் போட்டியில் சொதப்பியது. அந்த போட்டியில் இந்தியா பீல்டிங், பந்துவீச்சு, பேட்டிங் என எல்லாவற்றிலும் கோட்டை விட்டது. 2வது போட்டியில் இந்தியா மீண்டு வந்தாலும் மழையால் போட்டி நிறுத்தப்பட்டது.
கேப்டன் பதவி பேச்சுக்கள்
தற்போது 3வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெறாவிட்டால் டி20 தொடரை இழப்பதோடு, கேப்டன் கோலியின் பதவிக்கு அழுத்தம் ஏற்படும். ரோஹித் சர்மாவின் தலைமை பண்போடு, கோலியை ஒப்பிட்டு பேசுவது மேலும் அதிகரிக்கும். அடுத்த ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை தொடர் நடைபெற உள்ள நிலையில், இந்த பேச்சுக்கள் இந்திய அணியில் குழப்பத்தை மேலும் அதிகரிக்கலாம்.