இந்தியா 443 ரன்கள்
மூன்றாவது டெஸ்ட் மெல்போர்ன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. தட்டையான ஆடுகளம் என கூறப்படும் இந்த ஆடுகளத்தில் இந்தியா முதல் இன்னிங்க்ஸில் 7 விக்கெட்கள் இழப்பிற்கு 443 ரன்கள் எடுத்து டிக்ளர் செய்தது.
டிக்ளர் முடிவு
மாயன்க் அகர்வால் 76, புஜாரா 106, கோலி 82, ரோஹித் 63 என இந்திய பேட்ஸ்மேன்கள் பொறுப்பாக ஆடியதால் இந்தியா 443 ரன்களை எட்ட முடிந்தது. ரோஹித் ஆட்டமிழக்காமல் இருந்த போதே கேப்டன் கோலி டிக்ளர் முடிவை அறிவித்தார்.
பும்ரா 6 விக்கெட்கள்
அடுத்து ஆடிய ஆஸ்திரேலிய அணி சடசடவென விக்கெட்களை இழந்து 151 ரன்களுக்கு சுருண்டது. பும்ரா அசத்தலாக பந்துவீசி 6 விக்கெட்கள் அள்ளினார். ஜடேஜா 2, இஷாந்த் மற்றும் ஷமி தலா 1 விக்கெட் எடுத்தனர்.
ஃபாலோ-ஆன் இல்லையா?
292 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி ஃபாலோ-ஆன் கொடுக்க வாய்ப்பு இருந்தும் மீண்டும் பேட்டிங் ஆடத் துவங்கியுள்ளது. இந்த முடிவு சரியான முடிவாக இருக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
ஓவர்கள் கரையும்
மூன்றாம் நாளில் சுமார் 20 ஓவர்கள் மட்டுமே மீதமுள்ளது. இந்தியா 450 ரன்கள் வரை முன்னிலை பெற முயற்சிக்கும் என எடுத்துக் கொண்டால் இன்னும் 150 ரன்கள் அடிக்க வேண்டும். அதற்கு நான்காம் நாளில் கால் பகுதி ஓவர்கள் வரை இந்தியா எடுத்துக் கொள்ள வாய்ப்புள்ளது.
கட்டை போட வாய்ப்புள்ளது
அப்படி நடந்தால், ஆஸ்திரேலியா மீதமிருக்கும் ஒன்றரை நாள் வரை கட்டை போட்டு போட்டியை டிரா செய்ய முயற்சிக்க அதிக வாய்ப்புள்ளது. மாறாக, இந்தியா ஃபாலோ-ஆன் கொடுத்திருந்தால் ஆஸ்திரேலிய அணியால் 300 ரன்கள் தாண்டி இருக்க முடியுமா என்பது சந்தேகமே.
முடிவு சரியா?
முதல் இன்னிங்க்ஸில் கோலி 443 ரன்களுக்கு டிக்ளர் செய்ததை சிலர் விமர்சித்த நிலையில், அது சரியான முடிவாக அமைந்தது. அதே போல இரண்டாம் இன்னிங்க்ஸில் ஃபாலோ-ஆன் கொடுக்காத கோலியின் முடிவு சரியா என பொறுத்திருந்து பார்ப்போம்.