மெல்போர்ன்: இந்திய வீரர் ரிஷப் பண்ட் விக்கெட்டை வீழ்த்திய பின் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டன் ட்ராவிஸ் ஹெட் ஆபாச செய்கை ஒன்றை செய்தார். இது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அவருக்கு சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் தண்டனை அளிக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் கொந்தளித்து வருகின்றனர்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகின்றன. இந்த தொடரின் நான்காவது போட்டி மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியின் முதல் இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 474 ரன்களும், இந்திய அணி 369 ரன்களும் எடுத்தன.

இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 234 ரன்கள் எடுத்து இந்திய அணிக்கு 340 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது. ஐந்தாவது நாள் ஆட்டத்தில் 92 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் இந்திய அணி இந்த இலக்கை நோக்கி ஆடியது. இந்த போட்டியை டிரா செய்ய வேண்டும் என்ற முடிவில் இந்திய அணி நிதானமாக ஆடியது.
எனினும், ரோஹித் சர்மா, கே எல் ராகுல் மற்றும் விராட் கோலி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். அதன் பின் ஜோடி சேர்ந்த ரிஷப் பண்ட் மற்றும் ஜெய்ஸ்வால் நிதானமாக ஆடினர். ஜெய்ஸ்வால் அரைசதம் அடித்தார். 100 பந்துகளுக்கும் மேல் சந்தித்து 30 ரன்களை எடுத்து இருந்த பண்ட் நிதானமாக ஆடி வந்தது பாராட்டுகளை பெற்றது.
இந்த நிலையில் விக்கெட் கிடைக்காததால் ஆஸ்திரேலிய அணி பகுதி நேர பந்து வீச்சாளர்களை பயன்படுத்த தொடங்கியது. அதன்படி ட்ராவிஸ் ஹெட் பந்து வீச வந்தார். அவரது பந்துவீச்சில் எளிதாக சிக்ஸ் அடிக்கலாம் என ஆசைப்பட்டு ரிஷப் பண்ட் பந்தை தூக்கி அடித்தார். அது எளிதாக கேட்ச் ஆனது. இதை அடுத்து அவர் 105 பந்துகளை சந்தித்து 30 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.
ரிஷப் பண்ட் விக்கெட் வீழ்த்தியதை அடுத்து ட்ராவிஸ் ஹெட் தனது ஆள்காட்டி விரலை, மற்றொரு கைகளுக்குள் செலுத்துவது போல சைகை செய்தார். இது ஆபாச செய்கை ஆகும். ஒரு சர்வதேச கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் துணை கேப்டனாக இருக்கும் ட்ராவிஸ் ஹெட் இவ்வாறு செய்தது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.
ரிஷப் பண்ட் தனது விக்கெட்டை தானே தாரை வார்த்து இருக்கிறார். அதற்காக ஹெட் இப்படி மோசமாக செய்கை செய்தது சரியா? என ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் கொந்தளித்து வருகின்றனர். ரிஷப் பண்ட் ஆட்டமிழந்து சென்ற அடுத்த சில ஓவர்களில் ஜடேஜா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். இதை அடுத்து இந்திய அணி 28 ஓவர்கள் மீதம் இருந்த நிலையில் 6 விக்கெட்களை இழந்தது.