பெங்களூர் : இந்தியா - ஆஸ்திரேலியா அணிகள் மோதிய ஐந்தாவது டி20 போட்டியில் அம்பயர் இந்திய அணிக்கு சாதகமாக கடைசி ஓவரில் வைடு தராமல் போனதாக சர்ச்சை வெடித்துள்ளது.
இந்தப் போட்டி பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்றது. வழக்கத்துக்கு மாறாக இந்த மைதானத்தில் பேட்டிங் செய்ய கடினமான நிலையில் பிட்ச் இருந்தது. இந்தியா போராடி 160 ரன்கள் சேர்த்தது. அடுத்து ஆஸ்திரேலியா சேஸிங் செய்தது.
ஆஸ்திரேலியா 7 விக்கெட்களை இழந்த நிலையில் கேப்டன் மேத்யூ வேட் மட்டுமே அணியை வெற்றிக்கு அழைத்து செல்லக் கூடிய பேட்ஸ்மேனாக களத்தில் இருந்தார். கடைசி ஓவரில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் மேத்யூ வேட் 20வது ஓவரின் முதல் பந்தை சந்தித்தார். அர்ஷ்தீப் சிங் அந்த ஓவரை வீசினார்.
அது மேத்யூ வேட் தலைக்கு நேராக ஃபுல்டாஸாக வந்தது. விதிப்படி இது போன்ற பந்து வீசப்பட்டால் அது வைடு ஆகும். ஆனால், அம்பயர் வைடு தரவில்லை. மேத்யூ வேட் இதனால் அதிர்ச்சி அடைந்து பந்து வைடு என சைகை காட்டினார். ஆனால், அம்பயர் கண்டு கொள்ளவில்லை. அதனால், கோபத்தில் இருந்தார் மேத்யூ வேட்.

அடுத்த பந்தை பவுண்டரி அடிக்க முயன்று தோற்றார். அதன் பின் மூன்றாவது பந்தை அவர் சிக்ஸ் அடிக்க முயற்சி செய்தார். ஆனால், ஸ்ரேயாஸ் கேட்ச் பிடிக்கவே அவர் அவுட் ஆனார், ஆஸ்திரேலியாவால் கடைசி ஓவரில் 3 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. இந்தியா 6 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
தற்போது அம்பயர் கடைசி ஓவரில் வைடு தராமல் உதவியால் இந்தியா வென்றது என மற்ற நாடுகளை சேர்ந்த கிரிக்கெட் ரசிகர்கள் சமூக ஊடகங்களில் சர்ச்சையை கிளப்பி உள்ளனர்.