இந்தியா பேட்டிங்
இந்திய அணி இரண்டாம் போட்டியில் முதலில் பேட்டிங் செய்து 250 ரன்கள் எடுத்தது. இந்திய அணியில் கோலி 116, விஜய் ஷங்கர் 46 ரன்கள் எடுத்து அணியில் ஸ்கோரை உயர்த்தினர்.
முதலில் ஏமாற்றம்
அடுத்து, ஆஸ்திரேலியா பேட்டிங் செய்த போது துவக்க கட்டத்தில் விஜய் ஷங்கர் ஒரு ஓவர் வீசி 13 ரன்கள் கொடுத்து ஏமாற்றினார். இதனால், அவருக்கு அதன் பின் ஓவர்கள் கொடுக்கப்படவில்லை.
கடைசி நேர குழப்பம்
பின்னர் இந்திய அணியில் பும்ரா, குல்தீப், ஜாதவ், ஜடேஜா சிறப்பாக பந்துவீசி விக்கெட் வீழ்த்தினர். ஆனால், கடைசி 10 ஓவர்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஷமி, பும்ராவிற்கு 6 ஓவர்கள் மட்டுமே கையில் இருந்தது.
கடைசி ஓவரில் விஜய் ஏன்?
குல்தீப் யாதவ் 3 ஓவர்கள் வீச, ஷமி, பும்ரா தங்கள் 6 ஓவர்களை 49 ஓவர்களுக்குள் வீசச் செய்தார் கோலி. இதனால், கடைசி ஓவரை விஜய் ஷங்கர் வீச வேண்டிய கட்டாயம்.
கடைசி ஓவர் நிலை
பும்ரா, முன்னதாக சிறப்பாக பந்து வீசி விக்கெட்களை வீழ்த்தி, ரன்களை கட்டுப்படுத்தி வைத்திருக்க, கடைசி ஓவரில் ஆஸ்திரேலிய அணி 11 ரன்கள் எடுக்க வேண்டும். கையில் 2 விக்கெட் வைத்திருந்தது.
பும்ரா யோசனை
அந்த நேரத்தில் பும்ரா, விஜய்யிடம், பந்து நன்றாக ரிவர்ஸ் ஆகிறது என கூறியுள்ளார். அதனால், பந்தை நேராக ஸ்டம்ப்புகளுக்கு வீச வேண்டும். மேலும் பந்துகளை சரியான இடத்தில் பிட்ச் செய்ய வேண்டும் என முடிவு செய்தார் விஜய்.
விஜய்யின் தயார் நிலை
தான் எப்படியும் கடைசி 5-6 ஓவர்களில் பந்து வீச வாய்ப்பு பெறுவோம் என்பதை சூழ்நிலை உணர்ந்து யூகித்து வைத்திருந்தார். அதனால், எந்த பதற்றமும் இன்றி, பந்து வீசிய விஜய், கடைசி ஓவரின் முதல் பந்தில் அரைசதம் அடித்து ஆஸ்திரேலியாவுக்கு வெற்றி பெற்றுக் கொடுக்க காத்திருந்த ஸ்டாய்னிஸ் விக்கெட்டை எல்பிடபுள்யூ முறையில் சாய்த்தார்.
2 விக்கெட்கள் எடுத்தார்
இது தான் விஜய் ஷங்கரின் முதல் ஒருநாள் போட்டி விக்கெட் என்பது குறிப்பிடத்தக்கது. இரண்டாவது பந்தில் சாம்பா 2 ரன்கள் எடுத்தார். மூன்றாவது பந்தை நேராக ஸ்டம்ப்புகளை நோக்கி வீசி தகர்த்து சாம்பாவை அனுப்பி வைத்தார் விஜய்.
கடைசி ஓவர் கலக்கல்
மூன்றே பந்துகளில் 2 விக்கெட் சாய்த்த விஜய் ஷங்கர் கடைசி பந்து வரை போட்டியை இழுத்துச் செல்லாமல் எளிதாக இந்திய அணியை வெற்றி பெறச் செய்தார். பும்ராவின் வழி காட்டுதலோடும், தன் பதற்றமற்ற தன்மையாலும், விஜய் ஷங்கர் கடைசி ஓவரில் கலக்கினார்.