ஆஸ்திரேலிய தொடர்
இந்தியா - ஆஸ்திரேலிய இடையே மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர், மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடர் மற்றும் நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற உள்ளது. இதில் டெஸ்ட் தொடர் முக்கியமானதாக கருதப்படுகிறது.
விராட் கோலி விடுப்பு
அந்த டெஸ்ட் தொடரில் விராட் கோலி முதல் போட்டிக்கு பின் விடுப்பு எடுத்துக் கொண்டு இந்தியா செல்ல உள்ளார். தன் மனைவியின் குழந்தைப் பேறின் போது அருகே இருக்க வேண்டும் என அவர் நினைப்பதால் விடுப்பு எடுத்துக் கொண்டுள்ளார்.
காரணம் என்ன?
அதே ஏன் மூன்று போட்டிகள்? காரணம், ஜனவரி முதல் வாரத்தில் குழந்தை பிறக்கக் கூடும். ஆனால், டிசம்பர் கடைசி வாரத்தில் ஆஸ்திரேலியாவை விட்டு இந்தியா சென்று அங்கே குவாரன்டைனில் இருக்க வேண்டும். அதன் பின்னரே அவரால் மருத்துவமனைக்கு தடையின்றி செல்ல முடியும்.
இந்திய அணிக்கு இழப்பு
அதே போல, மீண்டும் ஆஸ்திரேலியா வந்தாலும் அவரால் குவாரன்டைன் உள்ளிட்ட விதிகளை தாண்டி நேரடியாக போட்டிகளில் பங்கேற்க முடியாது. எனவே, மூன்று போட்டிகளில் அவர் ஆட மாட்டார். இது இந்திய அணிக்கு பெரும் இழப்பாக மாறி உள்ளது.
ஆஸ்திரேலியா ஏமாற்றம்
அதே சமயம், ஆஸ்திரேலியாவும் இதில் ஏமாற்றம் அடைந்துள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பின் சர்வதேச கிரிக்கெட்டே நடைபெறாத நிலையில் ஆஸ்திரேலியா நடத்தும் முதல் கிரிக்கெட் தொடர் என்பதால் விராட் கோலி இல்லாமல் இந்திய அணி பலவீனம் அடையும். போட்டிகளில் சுவாரசியம் இல்லாமல் போகும் என கருதுகிறார்கள்.
ஆலன் பார்டர் என்ன சொன்னார்?
இந்த நிலையில், முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ஆலன் பார்டர் இது பற்றி பேசுகையில், விராட் கோலி தன் குழந்தையை ஆஸ்திரேலியாவில் பிறக்கச் செய்வார். அந்த குழந்தையை ஆஸ்திரேலியர் என அழைக்கலாம் என நாங்கள் எண்ணி இருந்தோம் என வேடிக்கையாக கூறினார்.
சாத்தியமா?
அவர் வேடிக்கையாக கூறினாலும், இது சாத்தியமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆஸ்திரேலிய குடியுரிமை பெறுவதில் பல்வேறு சிக்கல்கள் எழும் என்றாலும், ஆஸ்திரேலியர் என அழைப்பதை யாரும் தடுக்க முடியாது. அதைத் தான் பார்டர் கூறி இருக்கிறார்.