சிறு வயதில் நடந்தது
கோலி உலகின் சிறந்த பேட்ஸ்மேன் என அத்தனை கிரிக்கெட் ஜாம்பவான்களும் இன்று கூறி வருகின்றனர். அந்த சிறந்த பேட்ஸ்மேன் தன் சிறு வயதில் கிரிக்கெட் பேட்டிங் ஆட வாய்ப்பு கிடைக்காமல் அழுத சம்பவமும் நடந்துள்ளது.
பேட்டிங் வாய்ப்பு இல்லை
அதை பற்றி கோலி தன் ஆண்ட்ராய்டு ஆப்பில் அளித்த பேட்டியில் பேசியுள்ளார். தன் சகோதரர் தன்னை விட ஏழு வயது பெரியவர் என்றும், அவருடைய நண்பர்கள் கிரிக்கெட் ஆடும் போது சரியாக கோலியின் பேட்டிங் வாய்ப்பு வரும் போது விளையாட்டை முடித்துக் கொண்டு கிளம்பி விடுவார்கள் என்றும் கூறினார் கோலி.
பல முறை அழுதேன்
இதனால் பல முறை தான் அழுதுள்ளதாகவும், பல சமயங்களில் இது எரிச்சலை அளித்ததாகவும் கூறியுள்ளார். எனினும், தன் சகோதரர் தனது கிரிக்கெட் பயிற்சியில் பல்வேறு வகையில் உதவியாக இருந்ததாகவும், தன் கிரிக்கெட் வாழ்வை முக்கியமான ஒன்றாக கருதி அதற்காக பல முயற்சிகள் எடுத்தவர் என்றும் குறிப்பிட்டுள்ளார் கோலி.
இளம் வீரர்களுடன் கோலி எப்படி?
தான் இந்திய அணியில் இருக்கும் இளம் வீரர்களை இயல்பு நிலையில் இருக்குமாறு கூறுவேன் எனவும் தெரிவித்தார். சில இளம் வீரர்கள் தன்னிடம் மூத்த வீரர் என்ற பாவனையில் தயங்கித் தயங்கி பழகுவார்கள். அவர்களை எளிதாக இருக்குமாறு கூறுவேன் எனவும் தெரிவித்தார் கோலி.
இன்று முதல் இடம்
கோலி தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக சர்வதேச கிரிக்கெட்டில் அதிக ரன்கள் அடித்தவர் என்ற பெருமையை பெற்றுள்ளார். 2018இல் 2735 ரன்கள் அடித்துள்ள கோலி டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறார்.
அதுவே காரணம்
இன்று தரவரிசையில் முதல் வீரராக இருக்கும் கோலி அன்று சிறு வயதில் பேட்டிங் வாய்ப்பு கிடைக்காமல் அழுததாக கூறியுள்ளது வேடிக்கையாக இருந்தாலும், இன்று கோலி அணியில் தன் இடத்தை உணர்ந்து ஆடுவதற்கு அன்று அவர் வாழ்வில் நிகழ்ந்த ஏமாற்றங்களே உந்துதலாக இருக்கிறது என்பதே உண்மை.