பெங்களூர்: டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் விதிமுறையை மீறியதற்காக ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் ஸ்டீவன் ஸ்மித் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
இந்திய அணி நிர்ணயித்த 188 ரன்கள் இலக்கைத் துரத்திய ஆஸ்திரேலிய அணி, 112 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் 75 ரன்கள் வித்தியாசத்தில் வென்ற இந்திய அணி, 4 போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இதனிடையே இரண்டாவது இன்னிங்ஸின் போது 21-வது ஓவரை உமேஷ் யாதவ் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தில் ஸ்மித் எல்.பி.டபிள்யூ ஆனார். நடுவரின் தீர்ப்பில் சந்தேகம் இருந்தால் 15 வினாடிக்குள் பேட்ஸ்மேன் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். தன்னுடைய எல்.பி.டபிள்யூ அவுட் சரியானது என்று தெரிந்த ஸ்மித் மீதமிருக்கும் ஒரு ரிவியூ வாய்ப்பை வீணாக்க விரும்பவில்லை.
அதற்குப் பதிலாக ஆஸ்திரேலிய அணியின் டிரஸிங் ரூமில் இருந்து கொண்டு டி.வி. பார்த்துக் கொண்டிருக்கும் தொழில்நுட்ப அதிகாரிகளிடம் ரிவியூ வாய்ப்பை பயன்படுத்தலாமா? என்று சாடையில் கேட்டார்.
இதனை பார்த்துக்கொண்டிருந்த இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி, ஸ்மித் பெவிலியனில் இருந்து ஆலோசனை பெற்றதாக அம்பயரிடம் புகார் கூறினார். ஸ்மித்தின் செயல்பாட்டால் அதிருப்தி அடைந்த நடுவர், அவரை களத்தில் இருந்து உடனடியாக வெளியேற வலியுறுத்தினார். இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. அப்போது விராட் கோஹ்லி ஆக்ரோஷமான மனநிலையில் இருந்தார்.
ஐசிசி விதிமுறைப்படி, டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் முறையைப் பயன்படுத்த களத்தில் இருப்பவர்களைத் தவிர்த்து மற்றவர்களிடம் ஆலோசனைகள் கேட்கக் கூடாது.
இதுகுறித்து ஸ்மித் தனது செயலுக்காக மன்னிப்பு கேட்டுள்ளார். ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் அதிகாரப்பூர்வ டிவிட்டரில் ''நான் அவுட்டான நேரத்தில் சற்று மூளை மழுங்கி விட்டது. நான் அப்படி செய்திருக்கக்கூடாது என்று பதிவு செய்துள்ளார்.