பெர்த்: ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரின் முதல் போட்டியின் முதல் இன்னிங்ஸில் விராட் கோலி ஏமாற்றம் அளித்தார். அவர் வெறும் 5 ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்து வெளியேறினார். இதை அடுத்து ரசிகர்கள் அவரை ஓய்வு பெற்று செல்லுமாறு சமூக வலைதளங்களில் கொந்தளித்து வருகின்றனர்.
உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான விராட் கோலி 2024 ஆம் ஆண்டு முதல் மோசமான ஃபார்மில் இருக்கிறார். சமீபத்தில் நடந்த நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விராட் கோலி ஆறு இன்னிங்ஸ்களில் 93 ரன்கள் மட்டுமே எடுத்து இருந்தார். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான பார்டர் - கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்தது.

ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடர் மிக முக்கியமானது என்பதோடு, கேப்டன் ரோஹித் சர்மா முதல் போட்டியில் பங்கேற்கவில்லை என்பதால் விராட் கோலிக்கு அதிக பொறுப்பு இருந்தது. இந்த நிலையில், இந்திய அணி இந்தப் போட்டியில் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்து இருந்தது.
முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி விரைவாக 2 விக்கெட்களை இழந்தது. ஜெய்ஸ்வால், தேவ்தத் படிக்கல் ஆட்டமிழந்த நிலையில் களத்துக்கு வந்த விராட் கோலி 12 பந்துகளில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்தார். ஜோஷ் ஹேசல்வுட் வீசிய 17வது ஓவரில் எக்ஸ்ட்ரா பவுன்ஸ் ஆன பந்தை அடிக்க முயன்று, பின்னர் விலகினார். ஆனால், பந்து எட்ஜ் ஆனது.
எட்ஜ் ஆன பந்து முதல் ஸ்லிப்பில் நின்று இருந்த ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜாவிடம் கேட்ச் ஆனது. இதை அடுத்து 5 ரன்கள் எடுத்த நிலையில் ஆடுகளத்தை விட்டு வெளியேறினார் விராட் கோலி. அப்போது இந்திய அணி 32 ரன்களுக்கு 3 விக்கெட்களை இழந்து மோசமான நிலைக்கு சென்றது.
முன்னதாக ஜெய்ஸ்வால் 8 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார். அடுத்து வந்த தேவ்தத் படிக்கல் 23 பந்துகளை சந்தித்து டக் அவுட் ஆகி இருந்தார். அடுத்து விராட் கோலியும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்ததை அடுத்து இந்திய அணிக்கு அதிக அழுத்தம் ஏற்பட்டது.